search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாதவரம் பால் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் ஆவின் குடிநீர் பாட்டில் சென்னை முழுவதும் விற்க திட்டம்
    X

    மாதவரம் பால் பண்ணை

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மாதவரம் பால் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் ஆவின் குடிநீர் பாட்டில் சென்னை முழுவதும் விற்க திட்டம்

    • சென்னையில் மாதவரம் பால் பண்ணையில் உள்ள சுத்திகரிப்பு மையத்தில் குடிநீர் பாட்டில் தயாரிக்கப்பட உள்ளன.
    • பொதுமக்கள் வசதிக்காக 3 அளவுகளில் ஆவின் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் நிறுவனமான ஆவின் பால் மற்றும் பொருட்களுக்கு எப்போதும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. ஐஸ்கிரீம், நெய், குல்பி, இனிப்பு வகைள், பால் பவுடர் போன்றவை அதிகளவில் விற்பனை ஆகின்றன.

    தனியார் நிறுவனங்களை விட விலை குறைவாக இருப்பதோடு மட்டுமின்றி உயர் தரத்தில் ஆவின் பால் பொருட்கள் தயாரிக்கப்படுவதால் உடனுக்குடன் விற்று தீர்ந்து விடுகின்றன.

    தீபாவளி, பொங்கல், போன்ற பண்டிகை நாட்களில் ஆவின் இனிப்புகள் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்யும் திட்டமும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 23 ஆவின் பால் உற்பத்தி மையங்களில் உள்ள சுத்திகரிப்பு மையங்கள் வழியாக குடிநீர் பாட்டில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தனியார் நிறுவன குடிநீர் பாட்டில் 1 லிட்டர் 20 ரூபாய், அரை லிட்டர் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆவின் குடிநீர் பாட்டில் அதைவிட குறைவாக தரமாக விற்க உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் சா.மு.நாசர் ஆலோசனை நடத்தினார்.

    ஆவின் நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும் வகையில் குடிநீர் பாட்டில் திட்டத்தை முறையாக செயல்படுத்த எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன.

    பொதுமக்கள் வசதிக்காக 3 அளவுகளில் ஆவின் குடிநீர் வழங்கப்பட உள்ளது. 300 மில்லி, அரை லிட்டர், ஒரு லிட்டர் ஆகிய அளவுகளில் குடிநீர் பாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக சென்னையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆவின் முடிவு செய்துள்ளது.

    சென்னையில் மாதவரம் பால் பண்ணையில் உள்ள சுத்திகரிப்பு மையத்தில் குடிநீர் பாட்டில் தயாரிக்கப்பட உள்ளன. அதற்கான உற்பத்தி செயல்பாடுகள் தொடங்கி விட்டன. அங்கிருந்து சென்னை முழுவதும் ஆவின் குடிநீர் பாட்டில் வினி யோகிக்கப்படும். ஆவின் பார்லர்கள், முகவர்கள் மூலமாக பாட்டில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    இதுகுறித்து ஆவின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆவின் பால் பொருட்களுக்கு பொதுமக்களிடம் உள்ள வரவேற்பை போல குடிநீர் பாட்டிலுக்கும் இருக்கும் என்று நம்புகிறோம். அதன் அடிப்படையில் 3 அளவுகளில் பாட்டில் தயாரிக்கப்பட உள்ளது. 1 மணி நேரத்திற்கு 1000 லிட்டர் குடிநீர் பாட்டில் தயாரிக்க முடியும்.

    நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் தயாரிக்கலாம். தேவை அதிகரிக்கும் பட்சத்தில் அதிகமாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    முதலில் மாதவரத்தில் உற்பத்தி செய்ய லைசென்சு பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் விரைவில் குடிநீர் பாட்டில் உற்பத்தி தொடங்கப்படும். விலை குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×