search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதுநிலை மருத்துவ படிப்பு- 47 டாக்டர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தடை
    X

    முதுநிலை மருத்துவ படிப்பு- 47 டாக்டர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தடை

    • ஆகஸ்ட் 3, 4-ம் தேதிகளில் தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
    • 7-ந் தேதி முதல் 13-ந் தேதிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்.

    சென்னை:

    நாடு முழுவதும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகத்தின் மருத்துவ கலந்தாய்வு குழு ஆன்லைனில் நடத்தி வருகிறது.

    இதற்கிடையில் நடப்பு ஆண்டில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வுக்கும், மாநில கலந்தாய்வுக்கும் விண்ணப்பித்தவர்களில் கடந்த ஆண்டு இடங்கள் பெற்று கல்லூரிகளில் சேராதவர்கள் உள்ளனரா? என எம்.சி.சி. தரப்பில் இருந்து தேசிய தேர்வு வாரியத்திடம் தகவல் கோரப்பட்டது.

    அதில் 47 பேர் அவ்வாறு உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நடப்பாண்டில் கலந்தாய்வில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக இடங்களுக்கு விண்ணப்பித்த 2 பேர் குறித்த விவரங்கள் மாநில மருத்துவ கல்விக் குழுக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    எம்.டி. எம்.எஸ், எம்.டி.எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு https://mcc.nic.in என்ற இணையதளத்தில் இன்று (27-ந் தேதி) தொடங்குகிறது.

    இன்று முதல் ஆகஸ்டு 1-ந் தேதி நண்பகல் 12 மணி வரை பதிவு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 1-ந் தேதி இரவு 8 மணிவரை கட்டணம் செலுத்தலாம். நாளை (28-ந் தேதி) முதல் ஆகஸ்ட் 2-ந் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களை தேர்வு செய்யலாம்.

    ஆகஸ்ட் 3, 4-ம் தேதிகளில் தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆகஸ்ட் 5-ந் தேதி இட ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் வெளியிடப்படும். 6-ந் தேதி பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    7-ந் தேதி முதல் 13-ந் தேதிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும். 14 முதல் 16-ந் தேதி வரை மாணவர்களின் விவரங்களை கல்வி நிறுவனங்கள் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

    2-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 17-ந் தேதியும் இறுதியாக காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 28-ந் தேதியும் தொடங்க உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×