என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவிக்கு தாலிகட்டும் வீடியோவை வெளியிட்டவர் கைது
- தாலி கட்டிய மாணவர் சிதம்பரம் அருகே வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், கீரப்பாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தது தெரிய வந்தது.
- மாணவி மற்றும் மாணவியின் பெற்றோர் சிதம்பரம் டவுன் போலீசில் வீடியோ வெளியிட்டவர் மீது புகார் செய்தனர்.
கடலூர்:
சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு கல்லூரி மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சிதம்பரம் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று மாணவ, மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த மாணவி சிதம்பரம் அருகே வெங்காயதலமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும், அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. தாலி கட்டிய மாணவர் சிதம்பரம் அருகே வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், கீரப்பாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தது தெரிய வந்தது.
இவர்கள் 2 பேரிடமும் கடலூர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் முகுந்தன் மற்றும் ரம்யா ஆகியோர் விசாரணை நடத்தினர். அதோடு 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவி கடலூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மாணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக மாணவி மற்றும் மாணவியின் பெற்றோர் சிதம்பரம் டவுன் போலீசில் வீடியோ வெளியிட்டவர் மீது புகார் செய்தனர். புகார் மனுவில் தங்களை சாதி பெயரை சொல்லி திட்டியதாக கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜி கணேசன் மீது புகார் கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் பாலாஜி கணேசனை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.






