search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    4 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலை ரெயில் சேவை இன்று தொடங்கியது: உற்சாகமாக பயணித்த சுற்றுலா பயணிகள்
    X

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டு சென்ற காட்சி.

    4 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலை ரெயில் சேவை இன்று தொடங்கியது: உற்சாகமாக பயணித்த சுற்றுலா பயணிகள்

    • கடந்த 2 நாட்களாக ஓரளவு மழை குறைந்திருந்ததால் சீரமைப்பு பணிகள் வேகம் எடுத்தன.
    • ஊட்டிக்கு சுற்றுலா செல்ல வந்து, ரெயிலில் பயணிக்க விரும்பிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி, கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனையொட்டி கடந்த சில தினங்களாகவே 2 மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

    கடந்த 3-ந் தேதி இரவு நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் செல்லும் பாதையில், 5 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.

    இதுதவிர 4-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு, தண்டவாளம் தெரியாத அளவுக்கு மூடியபடி இருந்தது.

    தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தது.

    கடந்த 2 நாட்களாக ஓரளவு மழை குறைந்திருந்ததால் சீரமைப்பு பணிகள் வேகம் எடுத்தன. ஊழியர்கள் ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண் திட்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக கடந்த 4-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

    இதனால் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல வந்து, ரெயிலில் பயணிக்க விரும்பிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    நேற்றுடன் தண்டவாளத்தில் நடந்து வந்த சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்தது.

    இதனை தொடர்ந்து இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை தொடங்கியது.

    அதன்படி இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது.

    ரெயிலில் 186 சுற்றுலா பயணிகள் பயணித்தனர். அவர்கள் ரெயிலில் பயணித்தபடி, வனத்தின் இயற்கை அழகினை ரசித்தபடி ரெயிலில் பயணித்தனர்

    4 நாட்களுக்கு பிறகு மலை ரெயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×