search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு நீரா பானம் ஏற்றுமதி: விற்பனை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • சாதாரணமாகத் தென்னையில் இருந்து கிடைப்பதைவிட 3 மடங்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்
    • தென்னீரா பானம் தமிழகத்தின் தனித்துவமான தயாரிப்பு.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்நிறுவனம் 1200க்கும் மேற்பட்ட விவசாயிகளை பங்குதாரராக கொண்டு தென்னை மரங்களில் இருந்து நீரா பானத்தினை உற்பத்தி செய்து அதனை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. இந்த நீரா பானம் பல்வேறு வைட்டமின்கள், இரும்பு மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகும்.இது இ-காமர்ஸ் முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் நீரா பானத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலோங்க வாய்ப்புள்ளது.

    இது குறித்து நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் கூறுகையில், அமெரிக்காவில் உள்ள தமிழகத்தை சேர்ந்த கதிர்குருசாமி என்பவர் மூலம் ரீஜெண்ட் நார்த் அமெரிக்க நிறுவனம் நீரா பானத்திற்கான ஆர்டரை கொடுத்துள்ளது என்றார்.

    இதனால் தற்போது தினசரி 5000 பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும் நிலையில், அதனை உயர்த்தி இனி 20,000 ஆயிரம் பாக்கெட்டுகளாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ரூ.30 லட்சம் மதிப்புள்ள நீராபானம் அமெரிக்காவிற்கு கண்டெய்னர் மூலம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டு விற்பனை ரூ.25 கோடி ரூபாயை எட்டுவதற்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் நீரா பானத்தினை 5 கண்டெய்னர்களில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.இதன் விற்பனை அதிகரித்தால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலோங்க வாய்ப்புள்ளது.

    வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய (அபேடா) தலைவர் எம்.அங்கமுத்து கூறுகையில், இந்திய பாரம்பரிய பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்தி கிராமப்புறங்களில் தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்கிற பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியாக இந்த முயற்சி அமைந்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

    மேலும் நீரா பானம் உற்பத்திக்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என தென்னை நார் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்,

    தென்னீரா பானம் தமிழகத்தின் தனித்துவமான தயாரிப்பு. இதுபோன்ற முயற்சி அனைத்து மாநிலங்களிலும், எல்லா பொருள்களுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய பாரம்பர்ய பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்தி கிராமங்களில் தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.

    தென்னீராவை 50 நாடுகளில் விற்க வேண்டும். லூலூ, வால்மார்ட் போன்ற மிகப்பெரிய பேரங்காடிகளில் பிரதான பானமாக விற்கப்பட வேண்டும். தற்போது இந்தத் தென்னீரா பானம் அபேடா மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதன் மூலம் அபேடா குழு மற்றும் விவசாயிகள் அதிக பயன் அடைவர். மேலும், தமிழக அரசுடன் இணைந்து இந்த ஏற்றுமதியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என கூறினர்.

    நீராபானம் தயாரிப்பானது தென்னை மரத்தில் உள்ள பாளையில் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட ஐஸ் பெட்டியை வைத்து நீராவை சேகரிக்கிறார்கள். அதை குளிர்பதன கிடங்கில் ஒரு குறிப்பிட்ட குளிர் நிலையில் பத்திரப்படுத்தி, கை படாமல் சுத்தமான முறையில் டெட்ரா பேக்கில் அடைக்கிறார்கள். இதற்காக 2 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து இறுதியாக சிபிசிஆர்ஸ் காசர்கோடு ஆராய்ச்சி நிறுவனம் மூலம் தரம் உறுதி செய்யப்பட்டு 6 மாதங்கள் வரை இந்த தென்னீராவை கெடாமல் வைத்திருக்க முடியும் என சான்று பெற்றுள்ளனர். இதனால் பல மாதங்கள் தண்ணீர் பாய்ச்சி, நோய்த் தாக்குதலில் இருந்து காப்பாற்றி, குறைவான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வதைவிட நீராபானம் உற்பத்தி தென்னை விவசாயிகளுக்கு 3 மடங்கு அதிக வருமானம் கிடைக்கும் என்கிறார்கள்.

    இதுகுறித்து உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலசுப்ரமணியன் கூறுகையில், 1939-லேயே மகாத்மா காந்தி, நீரா ஒரு மிகச் சத்துள்ள பானம். இதைச் சாப்பிட்டால் ஏழை எளிய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க முடியும்னு சொல்லியிருக்கார். கமலா சோஹோனி என்ற பெண் விஞ்ஞானி நீரா குறித்து ஆராய்ச்சி செய்து குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கியிருக்கிறார். ஆனால் என்ன காரணமோ தெரியல... இந்த இயற்கையான நீரா பானத்தை யாரும் பெருசா கண்டுக்கல. காசர்கோடில் இருக்குற மத்திய விளைபொருள் ஆராய்ச்சி நிறுவனம் இந்த நீரா பானம் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே நாங்கள் 2020-ம் ஆண்டு 1,200 உழவர்களை ஒன்றிணைத்து உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கினோம். நீராவை சந்தைப்படுத்துவது குறித்து பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்துட்டு வந்தோம். இப்போது உலகத்திலேயே முதன்முதலாக நீரா பானத்தை 6 மாதங்கள் வரை கெடாத அளவுக்கு தயார் செய்து 'டெட்ரா பேக்'கிங்கில் சந்தைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். தென்னை மரத்தில் இருந்து நீராவை 5 டிகிரி வெப்பநிலையில் 'ஐஸ்' பெட்டி வெச்சு சேகரிச்சு அதை மைனஸ் 20 டிகிரி அளவுல மத்திய குளிரூட்டும் நிலையத்தில் வைப்போம். பிறகு டெட்ரா பேக்கிங் செய்றோம். இதுக்காக பல்லடத்தில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு குளிரூட்டும் நிலையத்தை அமைச்சிருக்கோம்.

    ஒரு பாக்டீரியா வளர்வதற்கு காற்றும் வெப்பமும் தேவை. ஆனால் 2 - 3 டிகிரி குளிர்நிலையில் காற்று இல்லாமல் 'டெட்ரா பேக்' மூலம் நாங்க நீராவை 'பேக்கிங்' செய்வதால் அது 6 மாதம் வரைக்கும் கெடாமல் இருக்கும். இதனால நீராவுடைய குணம், மணம், தரம் எதுவுமே மாறாது. சந்தையில கிடைக்குற மற்ற நீராவைப்போல இதை விற்பனை செய்யும் வரை ஐஸ் பெட்டியில வெச்சிருக்கணும்னு அவசியம் இல்ல. சாதாரணமா வெயில் படாத இடத்தில வெளிய இருந்தாலும் ஒண்ணும் ஆகாது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் இருக்கும் விவசாய பங்குதாரர்களிடம் இருந்துதான் இந்த நீராவை சேகரிக்கிறோம். இதனால அவர்களுக்கு சாதாரணமாகத் தென்னையில் இருந்து கிடைப்பதைவிட 3 மடங்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றார்.

    குட்டை, நெட்டை தென்னையில் அதிக நீரா உற்பத்தியாகும். ஆண்டுக்கு 12-14 பாளை உற்பத்தி செய்யும். ஒரு பாளையில் 1.5 - 3 லிட்டர் சாறு நாள் ஒன்றுக்கு கிடைக்கும். ஒரு பாளையில் 35 -45 நாள் வரை நீரா சாறு கிடைக்கும். மரம் ஒன்றுக்கு 6 மாதத்திற்கு 400-600 லிட்டர் சாறு கிடைக்கும். மரத்தின் பாரம்பரியம், பருவ கால மாற்றம், சாறு எடுப்பவர் திறமையை பொருத்தது.

    பதிவு செய்த தென்னை உழவர் உற்பத்தியாளர், தென்னை வளர்ச்சி வாரியம் பதிவு பெற்ற கூட்டுறவு சங்க நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்படும். நீரா உரிமம் பெற உணவு தரக்கட்டுப்பாடு சான்று அவசியம். உரிமம் பெற மொத்த தென்னை மரங்களில் தென்னை உற்பத்தியாளர் கம்பெனிகளில், கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமாக 5 சதவீதம் அல்லது 40,000 மரங்கள். இதில் எது குறைவோ அது இருக்க வேண்டும். நீரா உரிமம் பெற உதவி கலால் கமிஷனர் மாவட்ட ஆய்வு அதிகாரியாக உள்ளார். நீரா உற்பத்திக்கு தென்னை விவசாயிகள் சங்கம் விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின் தான் உற்பத்தி செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் நீரா உற்பத்தி செய்ய கூடாது.

    ஐஸ் பாக்ஸ், எதிர் நொதித்தல் முறை என இரண்டு விதமாக நீரா தயாரிக்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை 552 தென்னை உற்பத்தி சங்கங்கள், 66 தென்னை உற்பத்தி கூட்டமைப்பு உள்ளன. தனி நபர்கள் நீரா பானம் இறக்க அனுமதி கிடையாது. எனவே இதை தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு மூலம் தான் இறக்கி விற்பனை செய்ய முடியும். தென்னை விவசாயிகளுக்கு நல்ல பலன் தரும் பானம் தான் நீரா பானம்.

    Next Story
    ×