என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வாழப்பாடி அருகே நாயக்கர் கால நினைவுக்கல் கண்டுபிடிப்பு
    X

    வாழப்பாடி அருகே நாயக்கர் கால நினைவுக்கல் கண்டுபிடிப்பு

    • 300 ஆண்டுகளுக்கு முன் பேளூரை தலைமையிடமாகக் கொண்டு நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்கள் என குறிப்பிடப்படும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர்
    • நினைவுக்கல்லில் இருக்கும் தம்பதி, சின்னமநாயக்கர் வம்சாவழியைச் சேர்ந்த பாளையக்காரர்களாக இருக்கலாம்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூரை தலைமையிடமாகக் கொண்டு, 300 ஆண்டுகளுக்கு முன், நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்கள் என குறிப்பிடப்படும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். வாழப்பாடி பகுதியிலுள்ள சின்னம் நாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், ராமநாயக்கன்பாளையம், லட்சுமணசமுத்திரம், சின்னமசமுத்திரம் ஆகிய ஊரின் பெயர்களும், இப்பகுதியில் கண்டெக்கப்பட்ட நடுகற்கள், கல்வெட்டுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.

    பேளூரைச் சேர்ந்த ஊர் மணியக்காரர் திருமூர்த்தி கொடுத்த தகவலின் பேரில், சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த குழுவினர், பேளூர் வசிஷ்ட நதிக்கரையோரத்தில், திருமூர்த்தி விவசாய நிலத்தில் 300 ஆண்டுகள் பழமையான நாயக்கர் கால நினைவுக்கல் ஒன்று இன்றளவும் வழிபாட்டில் இருந்து வருவதைக் கண்டறிந்து உள்ளனர். இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கூறியதாவது:-

    300 ஆண்டுகளுக்கு முன் பேளூரை தலைமையிடமாகக் கொண்டு நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்கள் என குறிப்பிடப்படும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். இப்பகுதியில் சிவாலய திருப்பணிகள் செய்ததோடு, வசிஷ்ட நதியில் இருந்து வாய்க்கால்கள் வெட்டி, ஏரி, குளங்களும் அமைத்து நீர் மேலாண்மை செய்துள்ளனர்.

    இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டு, தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சின்னம நாயக்கர் மற்றும் லட்சுமண நாயக்கர் நடுகற்களும், இவர்களது பெயரிலுள்ள ஊர்கள் மற்றும் ஏரிகளும் இதனை உறுதி செய்கின்றன.

    தற்போது பேளூரில் வசிஷ்ட நதிக்கரையில் மணியக்காரர் திருமூர்த்தி விவசாய நிலத்தில் கண்டறியப்பட்டுள்ள இந்த நினைவுக்கல் நாயக்கர் காலத்தை சேர்ந்ததாகும். 300 ஆண்டு பழமையான இந்த நினைவுக்கல்லில் ஆணும், பெண்ணும் தம்பதியாய் இரு கைகூப்பி சிவலிங்கத்தை வணங்குவதைப்போல சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த நினை வுக்கல்லில் இருக்கும் தம்பதி, சின்னமநாயக்கர் வம்சாவழியைச் சேர்ந்த பாளையக்காரர்களாக இருக்கலாம். சிவன் கோயிலுக்கு பொன், பொருள் தானம் கொடுத்ததையோ, கோயில் திருப்பணி மேற்கொண்டதையோ நினைவுகூர்ந்து இந்த நினைவுக்கல் வைக்கப்பட்டிருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பேளூர் மணியக்காரர் திருமூர்த்தி கூறுகையில், பேளூர் பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்களான பாளையக்காரர்களை எங்களது மூதாதையர்களாக கருதுகிறோம். எங்களது தோட்டத்திலுள்ள இந்த நினைவுக்கல்லை, முன்னோர்களின் வழியில் தொடர்ந்து 300 ஆண்டுகளுக்கு மேலாக குலதெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறோம் என்றார். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர், 3 ஆண்டுகளுக்கு முன் பேளூரில் நாயக்கர் கால வரலாற்று சிறப்பு மிக்க மூக்கறுப்புப்போர் கல்வெட்டை கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×