search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்
    X

    புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்

    • ஆன்மிக பயணம் செல்லும் பக்தா்களுக்கு அரசு போக்குவரத்துகழகம் மேலாண் இயக்குனர் மோகன் குடிநீர், இனிப்பு, காரம், பிஸ்கெட் போன்றவைகள் வழங்கினார்.
    • பக்தர்களுக்கு ஒவ்வொரு கோவிலை பற்றிய தலவரலாறு மற்றும் அங்கு அருள் பாலிக்கும் பெருமாளின் பெருமைகளை விளக்குகின்றனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதி ஸ்தலங்கள் அமைந்துள்ளன.

    108 திவ்யதேச ஸ்தலங்களில் இடம் பெற்றுள்ள இத்தகைய கோவில்கள் ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி இரட்டை திருப்பதி, பெருங்குளம் தென்திருப்பேரை திருக்கோளூர் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

    புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தநாள் என்பதால் பக்தர்கள் இத்திருத்தலங்களில் தரிசனம் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆன்மிக சுற்றுலா சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இன்று 24-ந்தேதி, அக்டோபர் 1, 8 மற்றும் 15-ந்தேதி ஆகிய நாட்கள் நவதிருப்பதி கோவில்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    சிறப்பு பேருந்துக்காக நபர் ஒன்றுக்கு ரூ. 500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு முன்பதிவு நடைபெற்றது.

    புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காலை நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 3 பேருந்துகள் புறப்பட்டன.

    நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் மோகன், போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன், துணை மேலாளர்கள் சாலமோன், சக்திகுமார், சங்கரநாராயணன், போல்ராஜ், கிளை மேலாளர் சிவன்பிள்ளை, புதிய பஸ் நிலையம் பொறுப்பாளர் முனியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஆன்மிக பயணம் செல்லும் பக்தா்களுக்கு அரசு போக்குவரத்துகழகம் மேலாண் இயக்குனர் மோகன் குடிநீர், இனிப்பு, காரம், பிஸ்கெட் போன்றவைகள் வழங்கினார்.

    ஒவ்வொரு பேருந்திலும் ஒரு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் முன்னின்று வழிநடத்திச் செல்கின்றனர். பக்தர்களுக்கு ஒவ்வொரு கோவிலை பற்றிய தலவரலாறு மற்றும் அங்கு அருள் பாலிக்கும் பெருமாளின் பெருமைகளை விளக்குகின்றனர்.

    காலை 7 மணிக்கு கிளம்பிய பேருந்துகள் மாலை 7 மணிக்கு மீண்டும் நெல்லை புதிய பேருந்து நிலையத்தை வந்தடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனா்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி கோவில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், திருக்குறுங்குடி நம்பி கோவில் மற்றும் அத்தாளநல்லூர் பெருமாள் கோவில் ஆகிய இடங்களுக்கும், தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வெங்கடாஜலபதி கோவில் ஆகிய பகுதிக்கும் நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

    Next Story
    ×