search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 440 காசுகளுக்கு கீழ் குறைப்பு இல்லை
    X

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 440 காசுகளுக்கு கீழ் குறைப்பு இல்லை

    • தமிழ்நாடு மற்றும் கேரளா முட்டை விற்பனை சிறப்பாக உள்ளது.
    • ஐதராபாத் விலை குறைந்ததால் நாமக்கல் விலை குறைக்க வேண்டியது இல்லை.

    நாமக்கல்:

    முட்டை விலை நிர்ணய ஆலோசனை குழு கூட்டம் நாமக்கல்லில் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    நாமக்கல் முட்டை விலை 440 பைசாவாக தொடர்வது என்றும், இனிவரும் நாட்களில் 440 பைசாவிற்கு கீழ் முட்டை விலை குறைப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டது.

    பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாமக்கல் முட்டை விலை ஐதராபாத் உள்ளிட்ட மண்டலங்களின் விலையை விட சராசரியாக 20 முதல் 30 பைசா வரை அதிகமாகவே இருக்கும். தமிழ்நாடு மற்றும் கேரளா முட்டை விற்பனை சிறப்பாக உள்ளது. எனவே ஐதராபாத் விலை குறைந்ததால் நாமக்கல் விலை குறைக்க வேண்டியது இல்லை.

    கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாமக்கல்லில் 30 பைசா மைனஸ் என்பது மிகச் சிறப்பாக பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் ஒத்துழைப்புடன் விற்பனையாகி வருகிறது. இனி வரும் காலங்களிலும் இதே ஒத்துழைப்பு நீடிக்க என்.இ.சி.சி-யால் அறிவிக்கப்படும் மைனசிற்கு பண்ணையாளர்கள் விற்கவும், என்.இ.சி.சி-யால் அறிவிக்கப்பட்ட மைனசிற்கு மேல் வியாபாரிகள் கேட்காமலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    ஐதராபாத் விலை இறக்கத்தை பயன்படுத்தி நாமக்கல் மண்டலத்தில் முட்டை இருப்பு இல்லாத சூழ்நிலையிலும் சில வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் அதிக மைனசிற்கு கேட்பதாக தகவல்கள் வருகின்றன. இதனை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளோடு இணைந்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம், நாமக்கல் எக் புரோடியூசர்ஸ் அசோசியேசன், ராசிபுரம் முட்டை கோழி பண்ணையாளர்கள் சொசைட்டி மற்றும் பண்ணையாளர்கள் இணைந்து முட்டை எடுத்துச் சொல்லும் வியாபாரிகளின் வண்டிகளை ஆய்வு செய்ய உள்ளார்கள்.

    நாமக்கல்லில் முட்டை இருப்பே இல்லாத சூழ்நிலையிலும், அதிக மைனஸ் கேட்கும் வியாபாரிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் நோக்கிலும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு எடுக்கும் முடிவுகளுக்கு கோழி பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×