search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    யானை தந்தங்கள் பறிமுதல் வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு: கைதானவரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை
    X

    யானை தந்தங்கள் பறிமுதல் வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு: கைதானவரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை

    • சணல் சாக்கில் 14 கிலோ எடை கொண்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 யானை தந்தங்கள் இருந்தன.
    • பீர் முகம்மது சில ஆண்டுகளாக நகைகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

    கடையநல்லூர்:

    நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு நெல்லை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் வன உயிரின சரணாலய பகுதியில் யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து.

    இதையடுத்து மதுரை மண்டல தமிழ்நாடு வன உயிரினக்குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு, நெல்லை வன காவல்நிலைய வனச்சரக அலுவலர் லோக சுந்தரநாதன் தலைமையில் வனவர் சசிகுமார் மற்றும் குழுவினர், பணியாளர்கள் மற்றும் கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் வனவர் அம்பலவாணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ரோந்து சென்றனர்.

    கடையநல்லூர் வனச்சரகம் குறவன்பாறை செல்லும் வழியில் சந்தேகத்திற்கிடமாக காரில் நின்ற வடகரையை சேர்ந்த பீர் முகம்மது (வயது 52) என்பவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது காரை வனத்துறையினர் சோதனை செய்தனர். அதில் சணல் சாக்கில் 14 கிலோ எடை கொண்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 யானை தந்தங்கள் இருந்தன.

    அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அதனை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரையும், யானை தந்தத்தையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பீர் முகம்மதுவை பிடித்து மேல் விசாரணைக்காக கடையநல்லூர் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பீர் முகம்மது சில ஆண்டுகளாக நகைகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு கடையநல்லூர் சரகத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்களிடம் தந்தம் இருப்பதை அறிந்த அவர், அந்த மக்களிடம் இருந்து விலைக்கு வாங்கி கூடுதல் லாபத்திற்கு விற்பதற்காக காரில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    அவர் யாரிடம் தந்தங்களை வாங்கினார்? யாரிடம் விற்பதற்காக தந்தங்களை பதுக்கி வைத்திருந்தார்? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து வனத்துறையினர் பீர் முகம்மதுவிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×