search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி. சென்னை கோர்ட்டில் ஆஜர்
    X

    அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி. சென்னை கோர்ட்டில் ஆஜர்

    • அமைச்சர் பொன்முடி, கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில், தமிழக அரசின் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
    • கவுதம சிகாமணி எம்.பி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர்.

    சென்னை:

    தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில், தமிழக அரசின் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

    அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

    இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தினர். சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைகளை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடியும், சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

    செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

    இந்தச் சூழ்நிலையில், இந்த சட்டவிரோத பணபரி மாற்ற வழக்கு தொடர்பாக, அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தி.மு.க. எம்.பி.யுமான கவுதம சிகாமணி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ். பிஸ்னஸ் கவுஸ் நிறுவனம் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் ஆகஸ்டு மாதம் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த குற்றப்பத்திரிகை எண்ணிடப்பட்டு, கோப்புக்கு எடுத்த முதன்மை அமர்வு நீதிபதி, இந்த வழக்கை 12 -வது கூடுதல் செசன்சு கோர்ட்டு மாற்றி உத்தரவிட்டார்.

    இதனையடுத்து இந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம சிகாமணி எம்.பி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். பின்னர் அவர்களுக்கு குற்றபத்திரிகை நகல்கள் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு குற்ற பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி டிசம்பர் 22-ந்தேதி தள்ளி வைத்தார்.

    Next Story
    ×