search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மண்டை ஓடு உடைந்தால் உலோக மண்டை ஓடு- கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் முதல்முறையாக பொருத்தப்பட்டது
    X

    மண்டை ஓடு உடைந்தால் உலோக மண்டை ஓடு- கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் முதல்முறையாக பொருத்தப்பட்டது

    • முதல் முறையாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் இந்த நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
    • சாமானிய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மருத்துவ உதவியாகும்.

    சென்னை:

    மண்டையை உடைத்து விடுவேன் என்று சாதாரணமாக சொல்லிவிடலாம். ஆனால் ஒரு மனிதனின் மண்டை ஓடு என்பது பாதுகாப்பு பெட்டகம் போன்றது. மூளை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை மண்டை ஓடுதான் பாதுகாக்கிறது.

    இந்த மண்டை ஓடு உடைந்தால் ஆபத்து. விபத்து, தலையில் அடிபடுதல் போன்றவற்றால் சில நேரங்களில் மண்டை ஓடு உடைவதுண்டு. அவ்வாறு மண்டை ஓடு உடைந்து தலைக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடும்.

    இந்த மாதிரி மண்டை ஓட்டு சிகிச்சைக்கு ஆபரேசன் செய்து 'பீக்' எனப்படும் பிளாஸ்டிக்கை அதிக வெப்ப நிலையில் உருக்கி தயாரிக்கப்படும் ஒரு விதமான மெட்டீரியலை பொருத்தி வந்தனர். இது இலகுவாக இருப்பதால் அந்த இடத்தில் தெரியாமல் ஏதாவது அடிபட்டால் உள்ளே அமுங்கிவிடும்.

    இந்நிலையில் அதற்கு பதிலாக 'டைட்டானியம்' உலோகத்தால் புதிய மெட்டீரியல் தயாரித்து பயன்படுத்தப்படுகிறது. இதை பொருத்த சுமார் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. அதிலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது.

    இந்நிலையில் முதல் முறையாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் இந்த நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    கொளத்தூரை சேர்த்த செல்வமணி, பாடியை சேர்ந்த ரவி, கோயம்பேட்டை சேர்ந்த கிஷோர் ஆகியோர் தனித்தனி விபத்துகளில் சிக்கி மண்டை உடைந்தவர்கள். இவர்களுக்கு டைட்டானியம் உலோகத்திலான மண்டை ஓடு பொருத்தப்பட்டுள்ளது.

    இதுபற்றி மருத்துவமனை டீன் நாராயணசாமி கூறியதாவது:-

    இந்த நவீன சிகிச்சை முறை செலவு அதிகம். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரது சீரிய முயற்சியால் இந்த சிகிச்சை அரசு ஆஸ்பத்திரியிலும் சாத்தியமாகி உள்ளது.

    முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சையும் செய்யப்படுகிறது. இந்த மண்டை ஓடு மாற்று அறுவை சிகிச்சையை அளித்த டாக்டர்கள் கோடீஸ்வரன், சந்திரசேகர் ஆகியோர், இது சாமானிய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மருத்துவ உதவியாகும்' என்றனர்.

    Next Story
    ×