search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருமுட்டை விற்ற விவகாரம்- சிறுமியின் தாய் உள்பட 4 பேரிடம் மருத்துவ குழு நாளை விசாரணை
    X

    கருமுட்டை விற்ற விவகாரம்- சிறுமியின் தாய் உள்பட 4 பேரிடம் மருத்துவ குழு நாளை விசாரணை

    • பாதிக்கப்பட்ட சிறுமி சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
    • கோபி சிறையில் உள்ள சிறுமியின் வளர்ப்பு தந்தை, டிரைவர் ஜான் ஆகியோரிடமும் தனித்தனியாக மருத்துவ குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சட்ட விரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த டிரைவர் ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, மருத்துவர்கள் ஊழியர்கள், நிர்வாகிகளிடம் போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இதில் பாதிக்கப்பட்ட சிறுமி சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கு தங்கி இருந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மன உளைச்சல் காரணமாக கழிப்பறையை கழுவும் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஏற்படுத்தியது.

    பின்னர் 2 நாள் சிகிச்சைக்கு பிறகு சிறுமி டிசார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் அதே காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறுமியின் தாய், பெண் புரோக்கர் மாலதி ஆகியோர் கோவை மத்திய சிறையிலும், சிறுமியின் வளர்ப்பு தந்தை கோபி செட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையிலும், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த ஜான் ஈரோடு கிளை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் தமிழக மருத்துவ பணிகள் இயக்குனரக அலுவலர்கள் மனு செய்தனர். இந்த மனு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 4-ந் தேதி 4 பேரிடமும் சிறை விதிகளுக்கு உட்பட்டு விசாரித்து கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவின்படி மருத்துவ குழு டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் நாளை (திங்கட்கிழமை) கோவை சிறையில் உள்ள சிறுமியின் தாய், பெண் புரோக்கர் மாலதியிடம் நேரடி விசாரணையில் ஈடுபட உள்ளனர்.

    இதேப்போல் ஈரோடு, கோபி சிறையில் உள்ள சிறுமியின் வளர்ப்பு தந்தை, டிரைவர் ஜான் ஆகியோரிடமும் தனித்தனியாக மருத்துவ குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த விசாரணையில் பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×