search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாசி திருவிழா-கிருத்திகை: திருத்தணி, திருப்போரூர் முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

    • திருப்போரூர் கந்தசாமி கோவிலில் மாசி திருவிழா மற்றும் கிருத்திகையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் மாசி பெருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை என இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் முருகன், வள்ளி-தெய்வானை சமேதராய் எழுந்தருளி காட்சி தருகிறார்.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை, மாசித்திருவிழா மற்றும் கிருத்திகை என்பதால் திருத்தணி முருகன் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் திருத்தணி கோவில் வளாகம் முழுவதும் நிரம்பி வழிந்தது.

    திருப்போரூர் கந்தசாமி கோவிலில் மாசி திருவிழா மற்றும் கிருத்திகையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று இரவு முதலே சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி தரிசனம் செய்தார்கள். மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். இதேபோல் வெளி பிரகாரத்தில் உள்ள உற்சவர் சன்னதியிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. பலர் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.

    பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு அலகு குத்தி காவடி எடுத்து மாடவீதி வலம் வந்தனர். இதனால் கோவில் வளாகம் மட்டுமல்லாமல் மாட வீதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    Next Story
    ×