search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாவோயிஸ்டுகள் நடமாட்டம்: 3வது நாளாக பர்கூர்-பண்ணாரி சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
    X

    மாவோயிஸ்டுகள் நடமாட்டம்: 3வது நாளாக பர்கூர்-பண்ணாரி சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    • அனைத்து வாகனங்களும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது.
    • சரக்கு லாரிகளை நிறுத்தி போலீசார் மேலே ஏறி பார்வையிடுகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அய்யங்குன்னு இடிப்பகுற்றி வனப்பகுதியில் கடந்த 13-ம் தேதி போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது போலீசாரின் துப்பாக்கி சூட்டை சமாளிக்க முடியாமல் மாவோயிஸ்டுகள் 3 துப்பாக்கிகளை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ், வசந்த் என்கிற ரமேஷ், கேரளாவை சேர்ந்த சேர்மன் மற்றும் மனோஜ் என்கிற ஆஷிக், கர்நாடகாவை சேர்ந்த ஜிஷா மற்றும் விக்ரம் கவுடா ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க கேரளா போலீசார், கர்நாடகா நக்சல் தடுப்பு பிரிவு, தமிழக கியூ பிரிவு போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். தமிழக-கர்நாடகா மாநில எல்லையான ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு தப்பி செல்லலாம் என்பதால் அங்குள்ள சோதனை சாவடிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் முதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ் முருகன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3-வது நாளாக சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து பர்கூர், அந்தியூர் வழியாக ஈரோடு செல்லக்கூடிய அனைத்து பஸ்கள் கார் மற்றும் சரக்கு வாகனங்களையும், தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஈரோடு, அந்தியூர், பர்கூர் வழியாக மைசூரு செல்லக்கூடிய அனைத்து கார் பஸ் மற்றும் சரக்கு வாகனங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

    மேலும் அனைத்து வாகனங்களும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம் தப்பி ஓடிய மாவோயிஸ்டுகள் போட்டோவை காண்பித்து இவர்களை பார்த்தால் போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    இதேபோல் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான கார பள்ளம் சோதனை சாவடி, பாரதி புரம், எல்ல கட்டை சோதனை சாவடி, பண்ணாரி சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக இரவு நேரங்களில் வரும் வாகனங்களை நிறுத்தி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சரக்கு லாரிகளை நிறுத்தி போலீசார் மேலே ஏறி பார்வையிடுகின்றனர். பண்ணாரி சோதனை சாவடி வழியாக ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான கர்நாடகா சரக்கு வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. எனவே இந்த வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×