என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மங்களூரு குண்டு வெடிப்பில் காயம் அடைந்த நபர் கோவையில் சிம் கார்டு வாங்கினார்- விசாரணை தீவிரம்
- கோவையில் தீபாவளிக்கு முந்தைய நாள் கார் வெடித்து முபின் என்பவர் பலியானார்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர்.
கோவை:
கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து 2 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவர்கள் வைத்திருந்த உடமைகளை கர்நாடக போலீசார் சோதனை செய்து வெடிகுண்டை இயக்குவதற்கான சில பொருட்களை கைப்பற்றி உள்ளனர். மேலும் அவர்களது செல்போனில் இருந்து சிம்கார்டை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அந்த சிம்கார்டு கோவை முகவரியில் வாங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அந்த முகவரி பற்றி விசாரித்தபோது அது போலியான ஒரு முகவரி என்பது தெரிய வந்துள்ளது. போலி ஆவணங்களை கொடுத்து அந்த நபர்கள் செல்போன் சிம்கார்டு வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே கோவையில் தீபாவளிக்கு முந்தைய நாள் கார் வெடித்து முபின் என்பவர் பலியானார். அவரது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் மேலும் பலர் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர்.
இந்தநிலையில் தான் மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்துள்ளது. இதனால் மங்களூருவில் நாசவேலைக்கு திட்டமிட்டு காயம் அடைந்தவர்கள் கோவை கும்பலுடன் தொடர்புடையவர்களா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இங்குள்ள நபர்கள் அவர்களுக்கு சிம்கார்டு வாங்கிக்கொடுத்தார்களா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.






