search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிட்டுக் குருவிகளை பாதுகாக்க அனைவரும் உறுதியேற்போம்..
    X

    சிட்டுக் குருவிகளை பாதுகாக்க அனைவரும் உறுதியேற்போம்..

    • சிட்டுக்குருவிகள் ஓடு, குடிசை வீடுகளின் விட்டங்களிலும், தாழ்வாரங்களிலும் கூடு கட்டி வசிக்கும்.
    • 13 ஆண்டுகள் ஆயுளை கொண்ட சிட்டுக்குருவிகள் தற்போது 5 ஆண்டுகளுக்குள் தன் வாழ்நாளை முடித்துக் கொள்கிறது

    உலக சிட்டுக் குருவிகள் தினம் 2010 -ம் ஆண்டு முதல் மார்ச் 20 - ந்தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.பறவை இனமான சிட்டுக்குருவிகள் தற்போது அழியும் நிலையில் உள்ளது.

    பொது மக்களிடம் இதுகுறித்துசுற்றுச் சூழலியலாளர்கள்,மற்றும் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேன்'….,

    "சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு"..

    என்ற வரிகளில் தொடங்கும் சினிமா பாடல்கள் அனைவரது காதிலும் ஒலிக்கும் வகையில் சிட்டுக்குருவிகள் குறித்து கவிஞர்கள் பாடல் எழுதி உள்ளனர்.





    சிட்டுக்குருவிகள் வீட்டு வாசல்களில் கட்டித்தொங்க விடப்பட்டிருக்கும் நெற்கதிர்களை கொத்திவிட்டு, ஆள் அரவம் கேட்வுடன் பறந்து செல்லும் ஒரு சிறிய பறவைதான் இந்த சிட்டுக்குருவி.

    சிட்டுக்குருவிகள் ஓடு, குடிசை வீடுகளின் விட்டங்களிலும், தாழ்வாரங்களிலும் கூடு கட்டி வசிக்கும். அவை எழுப்பும் சிறிய 'கீச்'ஒலி அனைவரையும் சிலிர்க்க செய்யும்.

    தற்போது நாகரீக காலத்தில் வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், குளிர் சாதன வசதி செய்யட்டப்பட்டு உள்ளது. இதனால் வீடுகளில், சிட்டுக்குருவிகள் கூடு கட்டி குடியிருக்க முடியாமல் போய் விட்டது.



    இன்று (மார்ச் - 20) உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் 160 கோடி சிட்டுக் குருவி இனங்கள் உள்ளன. இந்தியாவில் லட்சக்கணக்கான சிட்டுக்குருவிகள் உள்ளன.

    "உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. அதனால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வழிவகை செய்திடல் வேண்டும் "ராமலிங்க அடிகளார் கூறி உள்ளார்.

    தினந்தோறும் சிட்டுக்குருவிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக 2010 -ம் ஆண்டு முதல் சிட்டுக் குருவிகள் தினம் மார்ச் 20ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

    பலசரக்குகடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.




    வீட்டுத்தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. மேலும் டிராக்டர்கள் பயன்படுத்தி வயல்களில் உழவுப்பணிகள் நடைபெறுவதாலும் மண்ணில் உள்ள சிறுசிறு உயிரினங்கள் கொல்லப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் குருவிகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சுகளால் குருவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.சிட்டுக்குருவிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வியப்பை தருகின்றன.

    மனிதனோடு மனிதனாக பின்னி பிணைந்து குடும்பத்தில் ஒருவராக வாழ்கிற பறவை இனமாக சிட்டுக்குருவிகள் உள்ளன. மேலும் மனித இனத்னோடு அடைக்கலம் ஆவதால், அவற்றை அடைக்கலாங் கூருவி என்றும் கூறுவர்.

    சிட்டுக்குருவி வீடுகளில் கூடுகட்டினால், அக்குடும்பத்தில் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்கிற அசாத்திய நம்பிக்கை இன்றளவும் கிராம மக்களின் நம்பிக்கையாக அமைந்து இருக்கிறது.சிட்டுக்குருவிகள் வீடுகளில் உள்ள பரண், மாடம், விட்டம் மற்றும் ஓடுகளின் இடுக்குகளில் உள்ள இடைவெளிகளில் கூடு கட்டி வசிக்கும் தன்மை கொண்டது.




    மேலும் நகர் புறங்களில் கான்கிரீட் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரிக்கத் தொடங்கியதால் வெளிக்காற்று வீட்டுக்குள் வராத வகையில் குளிர்சாதன வசதியை பயன்படுத்துவதால், சிட்டுக்குருவிகள் கூடுகட்டி குஞ்சு பொரிக்க போதிய வசதிகள் இல்லாமல் போய்விட்டது.

    கடந்த 20ஆண்டுகளில் சிட்டுக்குருவிகள் 60சதவிகிதம் அழிந்துவிட்டது என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவர தகவல் வெளியாகி உள்ளது.2010- ம் ஆண்டு மார்ச் 20- ம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக ஐ.நா. அங்கீகரித்தது.

    13 ஆண்டுகள் ஆயுளை கொண்ட சிட்டுக்குருவிகள் தற்போது 5 ஆண்டுகளுக்குள் தன் வாழ்நாளை முடித்துக் கொள்கிறது. எனவே சிட்டுக்குருவிகளை அழிவுப்பாதையில் இருந்து மீட்டெடுக்க உலக சிட்டுக்குருவி நாளில் நாம் அனைவரும் ஒன்று இணைந்து உறுதியேற்போம்.

    Next Story
    ×