என் மலர்
தமிழ்நாடு

கொடநாடு கொள்ளை வழக்கு- சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. நேரில் விசாரணை
- கடந்த 22-ந் தேதி கொடநாடு எஸ்டேட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
- சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஷகில் அக்தர் இன்று ஊட்டிக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகிறார்கள்.
ஊட்டி:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்க வந்த காவலாளியும் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் பல மர்மங்கள் இருந்ததால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மறு விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
தனிப்படை போலீசார் கோவை ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் விசாரணை நடத்தினர். ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்கள் என பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏற்கனவே கைப்பற்றப்பட்ட விசாரணை விவரங்கள், வாக்குமூல விவரங்களை தனிப்படையினர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதன் அறிக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடமும் ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கடந்த 22-ந் தேதி கொடநாடு எஸ்டேட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். எஸ்டேட் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். கூடுதல் விசாரணைக்காக ஓரிரு நாட்களில் திரும்ப வருவோம், எனவே ஊழியர்கள் யாரும் வெளியூர் செல்ல வேண்டாம் என உத்தரவிட்டு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஷகில் அக்தர் இன்று ஊட்டிக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகிறார்கள். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர் காரில் ஊட்டி செல்கிறார்.
அங்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசாருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து அவரே நேரடி விசாரணையில் இறங்க உள்ளார். அப்போது எஸ்டேட்டுக்கும் நேரில் சென்று அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்துவார் என தெரிகிறது.
சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரி ஒருவர் நேரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளதால் கொடநாடு வழக்கு அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.