search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: காவலாளி கிருஷ்ணதபாவை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.முடிவு
    X

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: காவலாளி கிருஷ்ணதபாவை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.முடிவு

    • சில தினங்களுக்கு முன்பு கூட கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
    • காவலாளி கிருஷ்ணதபாவிடம் விசாரணை நடத்தும்போது இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது கொள்ளை சம்பவத்தை அங்கிருந்த காவலாளிகளான ஒம்பகதூர் மற்றும் கிருஷ்ணதபா தடுக்க முயன்றனர்.

    இதில் ஒம்பகதூர் கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணதபா படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இந்த வழக்கில் மேற்குமண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் தனிப்படையினர் மறுவிசாரணை நடத்தி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

    இதையடுத்து இந்த வழக்கினை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., டிஜி.பி ஷகில் அக்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி விட்டனர். சில தினங்களுக்கு முன்பு கூட கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் புகார்தாரரான கொடநாடு எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்த மற்றொரு காவலாளியான கிருஷ்ணதபாவிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    கிருஷ்ணதபா தற்போது நேபாளத்தில் வசித்து வருகிறார். அவரை நீலகிரி அழைத்து வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேபாளத்திற்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    காவலாளி கிருஷ்ணதபாவிடம் விசாரணை நடத்தும்போது இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×