search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: யானைப் பசிக்கு சோளப்பொரி போட்டதுபோல் உள்ளது- கே.எஸ்.அழகிரி அறிக்கை
    X

    கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: யானைப் பசிக்கு சோளப்பொரி போட்டதுபோல் உள்ளது- கே.எஸ்.அழகிரி அறிக்கை

    • பஞ்சாப் தேர்தலை மனதில் கொண்டு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றார்
    • 2024 மக்களவை தேர்தலில் உரிய பாடத்தை மோடி அரசுக்கு நிச்சயம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாடு முழுவதும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. ஐந்து மாநில தேர்தலை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலையை மனதில் கொண்டு இந்த முடிவை அரசியல் ஆதாய நோக்கத்தில் எடுத்து உள்ளது.

    எந்தவித விவாதமும் இல்லாமல் 3 வேளாண் சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதை எதிர்த்து ஓராண்டு காலம் போராடிய விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்க முன்வராத கொடூரமான ஆட்சி நடத்திய பிரதமர் மோடி, பஞ்சாப் தேர்தலை மனதில் கொண்டு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றார். அதைப் போல தான் இப்போதும் விலை குறைப்பு நடந்திருக்கிறது.

    பா.ஜ.க. ஆட்சியில் 9 ஆண்டுகளில் சிலிண்டர் விலை ரூ.1118.50 ஆக கடுமையாக உயர்த்தப்பட்டது. தற்போது அதில் ரூ.200 மட்டுமே குறைத்திருப்பது யானை பசிக்கு சோளப்பொரி போட்டதாகத் தான் கருத வேண்டும்

    ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத வகையில் 23 சதவீதமாக உயர்ந்து உள்ளது. ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை திசைத் திருப்புகிற நோக்கத்தில் ராமர் கோவில் கட்டுவோம், அரசமைப்புச் சட்ட உறுப்பு 370 ரத்து செய்வோம், மணிப்பூர் மாநிலத்தில் வகுப்புவாத கலவரத்தை தூண்டி விடுவோம் என வெறுப்பு அரசியல் மூலம் வாக்கு வங்கியை விரிவுபடுத்துகிற முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி வாங்கும் சக்தியை இழந்து வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிற மக்கள் 2024 மக்களவை தேர்தலில் உரிய பாடத்தை மோடி அரசுக்கு நிச்சயம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×