search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போர்க்களமாக மாறிய போராட்டம்... போலீஸ் மீது தாக்குதல்: பள்ளியை சூறையாடிய மாணவர் அமைப்பினர்
    X

    போர்க்களமாக மாறிய போராட்டம்... போலீஸ் மீது தாக்குதல்: பள்ளியை சூறையாடிய மாணவர் அமைப்பினர்

    • இறந்துபோன மாணவியின் பிரேத பரிசேதனை அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெற்றோர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பேராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர் அமைப்பினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பொதுமக்களும் களமிறங்கினர். இதனால் சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.



    ஒருகட்டத்தில் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் நுழைய முயன்றனர். அவர்களை தடுக்க போலீசார் முயற்சி செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பேரிகார்டுகளை உடைத்துக்கொண்டு மாணவர்கள், பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்றனர். கற்களை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் போலீசார் பலர் காயமடைந்தனர். போலீஸ் உயர் அதிகாரி ஒருவரும் காயமடைந்தார். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். வாகனங்களை அடித்து நொறுக்கினர்.




    ஒரு கட்டத்தில் நுழைவு வாயிலை உடைத்துக்கொண்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் போலீசாரும் கற்களை வீசி போராட்டக்காரர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், கலவரத்தை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×