என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அண்ணா சாலையில் தேங்கிய மழை வெள்ளம்
சென்னையில் இன்று மிக கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்
- கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது.
- அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டிய பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் தமிழக பகுதிகளில் நிலவுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்குன்றத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னை பெரம்பூரில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை இன்று பெய்யக்கூடும். மேலும் டெல்டா மாவட்டங்கள் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
கடந்த 72 ஆண்டுகளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் கனமழை (8 செ.மீ.) 3-வது முறையாக பதிவாகி உள்ளது. 30 ஆண்டுகளில் முதல்முறையாக அதிகபட்சமாக இன்று மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






