search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஐ.எஸ் ஆதரவாளர்கள் உள்பட 1000 பேரின் விவரங்கள் ஆக்டோபஸ் மென்பொருளில் பதிவு
    X

    ஐ.எஸ் ஆதரவாளர்கள் உள்பட 1000 பேரின் விவரங்கள் ஆக்டோபஸ் மென்பொருளில் பதிவு

    • கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உளவுப்பிரிவுகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • கடந்த 6 மாதங்களில் ஒட்டுமொத்தமாக ஆயிரம் பேரின் சுயவிவரங்கள் மென்பொருளில் பதிவேற்றப்பட்டுள்ளன.

    கோவை:

    கோவை மாநகர காவல்துறையில் நுண்ணறிவு பிரிவு (ஐ.எஸ்), சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி) ஆகிய உளவுப்பிரிவுகள் உள்ளன.

    மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் இப்பிரிவுக்கென தனி காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு சம்பவங்கள் தொடர்பாக களத்துக்கு சென்று தகவல்களை சேகரித்து போலீஸ் கமிஷனரின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உளவுப்பிரிவுகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் உளவுப்பிரிவுகளின் மூலம் களத்தில் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பரிமாற்றம் செய்யும் வகையிலும் சந்தேகத்திற்குரிய நபர்களை கண்காணிக்கவும், வி.ஐ.பிக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தனியார் உதவியுடன் மாநகர போலீஸ் துறை சார்பில் ஆக்டோபஸ் என்ற பிரத்யேக மென்பொருள் உருவாக்கப்பட்டு, கடந்த மே மாதம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த மென்பொருள் மூலம் 1000 பேரின் சுயவிவரங்கள் சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த மென்பொருள் மூலம் மிக முக்கிய நபர்கள், அவர்களின் புகைப்படங்கள், குடியிருப்பு விவரங்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான நடவடிக்கையாகும்.

    அதேபோல் மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்கள் வாரியாக உள்ள கல்லூரிகள், அரசு, தனியார் பள்ளிகள், பெட்டிக்கடைகள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களின் எண்ணிக்கை விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் 200 பேரின் சுய விவரங்கள் சேகரிக்கப்பட்டு இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்களது நடவடிக்கைகளை கண்காணித்து அப்டேட் செய்து வருகிறோம். அதன்படி கடந்த 6 மாதங்களில் ஒட்டுமொத்தமாக ஆயிரம் பேரின் சுயவிவரங்கள் இந்த மென்பொருளில் பதிவேற்றப்பட்டுள்ளன.

    இதில் உள்ள விவரங்களை போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர்கள் பார்க்கலாம். இதற்காக ரூ.10 லட்சம் செலவு செய்து பிரத்யேக சர்வர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆக்டோபஸ் மென்பொருளில் உள்ள ஆவணங்கள் உளவுத்துறை தகவல்களை சரி பார்க்க அதிகாரிகளுக்கு உதவும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×