search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தற்கொலை செய்யும் இடத்தை பகிர்ந்து ஐகோர்ட் வக்கீல் தீக்குளித்து உயிரிழப்பு
    X

    தற்கொலை செய்யும் இடத்தை பகிர்ந்து ஐகோர்ட் வக்கீல் தீக்குளித்து உயிரிழப்பு

    • திருமண வயதை எட்டிய விக்னேஷ் ரகுராமுக்கு அவரது பெற்றோர் கடந்த சில மாதங்களாகவே பெண் பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
    • விக்னேஷ் ரகுராமின் உறவினர்கள் சிலருக்கு செல்போனில் வாட்ஸ்அப் தகவல் ஒன்று வந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆத்துக்கடை இறக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் விக்னேஷ் ரகுராம் (வயது 29). சட்டம் படித்துள்ள இவர் தற்போது மதுரை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.

    திருமண வயதை எட்டிய விக்னேஷ் ரகுராமுக்கு அவரது பெற்றோர் கடந்த சில மாதங்களாகவே பெண் பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், எனவே பெண் பார்க்கும் படலத்தை நிறுத்திக்கொள்ளுமாறும் விக்னேஷ் ரகுராம் தனது பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்தார்.

    இருந்தபோதிலும் பெற்றோர் தொடர்ந்து மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன் தினம் வழக்கம்போல் மதுரை ஐகோர்ட்டில் இருந்து பணி முடிந்து வீடு திரும்பிய விக்னேஷ் ரகுராம், சிறிது நேரத்தில் யாரிடமும் எதுவும் கூறாமல் வெளியில் புறப்பட்டு சென்றார்.

    இதற்கிடையே விக்னேஷ் ரகுராமின் உறவினர்கள் சிலருக்கு செல்போனில் வாட்ஸ்அப் தகவல் ஒன்று வந்தது. அதில் திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், தான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறப்பட்டு இருந்தது. அத்துடன் அவர் தற்கொலை செய்துகொள்ளும் இடத்தையும் லொக்கேஷன் மூலம் பகிர்ந்து இருந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன்கோவில்-அழகாபுரி சாலையில் முனியாண்டி கோவில் எதிரே உள்ள முள்காட்டிற்குள் விக்னேஷ் ரகுராம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்த தகவலின்பேரில் நத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விக்னேஷ் ரகுராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக அவரது தந்தை வீரபத்திரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×