search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் அருகே அரசு என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் தற்கொலை
    X

    சேலம் அருகே அரசு என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் தற்கொலை

    • ஷோபனா தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஈரோட்டில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபிரபாகரன் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியில் சிவில் துறையில் தற்காலிக உதவி பேராசிரியராக ஜெயபிரபாகரன் (வயது 34) என்பவர் பணியாற்றி வந்தார். அதே துறையில் இவரது மனைவி ஷோபனா (31) உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த தம்பதிக்கு கடந்த 2017-ம் வருடம் திருமணம் முடிந்து மகரன் (4), ரெணத் (1½) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    ஜெயபிரபாகரன் தனது பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பில் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று கல்லூரிக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்ததால் நேற்று முன்தினம் ஷோபனா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஈரோட்டில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றார்.

    இதனிடையே நேற்று இரவு கல்லூரி குடியிருப்பில் உள்ள வீட்டில் ஜெயபிரபாகரன் திடீரென மனைவியின் துப்பட்டாவை கழுத்தில் மாட்டி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலையில் அவரது பெற்றோர் எழுந்து பார்த்தபோது வீட்டில் தங்களது மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர். உடனடியாக மகனின் உடலை கீழே இறக்கி இதுபற்றி கருப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயபிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபிரபாகரன் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உதவி பேராசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி வளாகத்தில் வசித்து வரும் பேராசிரியர்கள், அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×