என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சோப்பு விற்பதுபோல் நடித்து வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து பணம் மோசடி
- வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து பணம் மோசடியில் ஈடுபடுவது தெரிய வந்தது.
- கும்பல் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் மோசடி செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு மற்றும் சூரம்பட்டி பகுதியை சேர்ந்த 2 பெண்கள் சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் செய்தனர். அதில் தங்களிடம் பரிசு விழுந்ததாக கூறி பணம் மோசடி செய்ததாக தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு தகவல்கள் வெளியானது.
சேலம், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பல் ஒரு தனியார் சோப்பு நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி ஈரோடு மாவட்டத்தில் பகல் நேரங்களில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து பணம் மோசடியில் ஈடுபடுவது தெரிய வந்தது.
சோப்பு விற்பது போல் வீடுகளுக்கு செல்லும் மர்ம நபர்கள் தனியாக இருக்கும் பெண்களிடம் 2 சோப்பு ரூ.50-க்கு தருகிறோம். சோப்பில் பரிசு கூப்பன் உள்ளது. கூப்பனில் என்ன பரிசு விழுந்ததோ அது உடனடியாக கொடுக்கப்படும் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளனர்.
இதை நம்பி பரிசுக்கு ஆசைப்பட்டு பெண்கள் சோப்பு வாங்கி உள்ளனர். அப்போது சிலருக்கு குக்கர், தோசைக்கல் பரிசாக விழுந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்களிடம் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் ரூ.100 கொடுத்து மற்றொரு பரிசு கூப்பன் வாங்கினால் மெகா பரிசு கிடைக்கும். அதில் மொபட், 7 பவுன் நெக்லெஸ் ஆகியவை பரிசாக கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளனர். இதை நம்பிய பெண்கள் கூப்பனை வாங்கி இருக்கிறார்கள்.
பின்னர் மோசடி கும்பல் கூப்பன் வாங்கிய பெண்களின் வங்கி கணக்கு எண், செல்போன் எண் ஆகியவற்றை பெற்று சென்றுள்ளனர். திடீரென ஒரு நாள் அவர்கள் சம்பந்தப்பட்ட பெண்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு மொபட் பரிசு விழுந்ததாக கூறி ஏதாவது ஒரு ஷோரூம் முன்பு நின்று மொபட்டை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பி உள்ளனர்.
இதை உண்மை என்று நம்பும் பெண்களிடம் ஜி.எஸ்.டி, டேக்ஸ் ரூ.12 ஆயிரம் ஜிபே மூலம் செலுத்தினால் உங்களுக்கு மொபட் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து பரிசு விழுந்த மகிழ்ச்சியில் அந்த பெண்களும் மோசடி நபர்கள் சொல்லும் எண்ணுக்கு ஜிபே மூலம் பணத்தை அனுப்பி உள்ளனர்.
இதேபோல் நெக்லெஸ் பரிசு விழுந்ததாக கூறி ஒரு பவுனுக்கு ரூ.2500 ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என்று கூறி ரூ.17,500 அனுப்ப சொல்லி கூறி உள்ளனர். இதை உண்மை என்று நம்பி அவர்களும் பணத்தை செலுத்தி உள்ளனர். பணம் செலுத்திய பின்பு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்தே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் மோசடி கும்பலுக்கு பணம் அனுப்பிய எண்ணை தொடர்பு கொண்டால் அது பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனம் என்று தெரிய வந்தது.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முக கவசம் அணிந்தபடி வந்தவர்கள் தங்களது உறவினர்கள் பணம் செலுத்துவார்கள் அதை எங்களிடம் கொடுங்கள் என்று கூறி வாங்கி சென்றது தெரிய வந்தது. இதேபோல் இந்த கும்பல் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் மோசடி செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே அந்த கும்பலை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.






