என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காட்பாடியில் ரெயிலில் ஏறியபோது ரெயில்-பிளாட்பாரம் இடையே சிக்கி வெளிநாட்டு பெண் பலி
    X

    காட்பாடியில் ரெயிலில் ஏறியபோது ரெயில்-பிளாட்பாரம் இடையே சிக்கி வெளிநாட்டு பெண் பலி

    • பர்வீன் ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவர் பிளாட்பாரத்திற்கும் ரெயிலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார்.
    • காட்பாடி ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் பர்வினை மீட்டு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    வேலூர்:

    பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் அமிரூல் இஸ்லாம். இவருடைய மனைவி பர்வீன் (வயது 40). சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். நேற்று சென்னை சென்று அங்கிருந்து நாடு திரும்ப முடிவு செய்தனர்.

    இதற்காக நேற்று இரவு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தனர். 2-வது பிளாட்பாரத்தில் சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அப்போது அமிரூல் இஸ்லாம் மற்றும் அவரது மகள் ரெயிலில் ஏறினர். அதிக பைகள் இருந்ததால் பர்வீன் ஒவ்வொரு பையையும் ரெயில் படிக்கட்டு அருகே வாசலில் ஏற்றி வைத்துவிட்டு கடைசியாக ஒரு பையை எடுத்துக்கொண்டு ரெயிலில் ஏறினார்.

    அதற்குள் ரெயில் புறப்பட்டது. அப்போது பர்வீன் ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவர் பிளாட்பாரத்திற்கும் ரெயிலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார்.

    இதனைக் கண்ட அவருடைய கணவர் மற்றும் மகள் அலறி கூச்சலிட்டனர். மற்ற பயணிகளும் சத்தம் போட்டனர். அதற்குள் ரெயில் மற்றும் பிளாட்பாரம் இடையே சிக்கிய பர்வீன் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    காட்பாடி ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் பர்வினை மீட்டு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பர்வீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

    அவரது உடல் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சிகிச்சைக்கு வந்த இடத்தில் பர்வீன் பலியானதை கண்டு அமிரூல்இஸ்லாம் மற்றும் அவரது மகள் அழுது துடித்தனர். இந்த சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயிலில் ஏறும்போது பயணிகள் கவனமுடன் ஏற வேண்டும். ஓடும் ரெயில்களில் எந்த காரணத்தைக் கொண்டும் ஏற முயற்சி செய்ய வேண்டாம் என ரெயில்வே போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×