search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திண்டுக்கல் அருகே புகையிலைபட்டியில் மீன்பிடி திருவிழா உற்சாகம்
    X

    திண்டுக்கல் அருகே புகையிலைபட்டியில் மீன்பிடி திருவிழா உற்சாகம்

    • பெரிய குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
    • பல்வேறு பகுதிகள் மற்றும் கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் மடூர் ஊராட்சியில் புகையிலைப்பட்டி உள்ளது. இங்கு உள்ள பெரிய குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் பெரியகுளம் நிரம்பியது. விவசாயத்திற்கு பெரியகுளம் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று ஊர் நாட்டாமை சூசைமாணிக்கம், மணியக்காரர் சின்னப்பன், கோவில்பிள்ளை சின்னப்பன், ஊர் நிர்வாகிகள் காமராஜ், சரவணன் மற்றும் பொதுமக்கள் பெரிய குளத்தின் அருகே உள்ள கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன் பின்னர் வான வேடிக்கையுடன் பெரியகுளத்திற்கு ஊர்வலமாக வந்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த மீன்பிடி திருவிழாவில் ராஜக்காபட்டி, மணியக்காரன்பட்டி, பெரியகோட்டை மற்றும் திருச்சி, மணப்பாறை, மதுரை உள்பட பல்வேறு பகுதிகள் மற்றும் கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக பெரியகுளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ஜிலேபி, விரால், தேளிவிரா, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன. கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த மீன்பிடி திருவிழாவில் பிடித்த மீன்களை கிராம மக்கள் விற்பனை செய்யாமல் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றதோடு, தங்கள் உறவினர்களுக்கும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொடுத்து விருந்தோம்பலை போற்றி கொண்டாடினர்.

    Next Story
    ×