search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரத்தில் 2-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்: ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு
    X

    ராமேசுவரத்தில் 2-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்: ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு

    • 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற ஒரு படகுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வருகிற 27-ந் தேதி வரை ராமேசுவரம் மீனவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    2-வது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் நடந்தது. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. கடற் கரையில் விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.

    ராமேசுவரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இறால் மீன், நண்டு, கனவாய் உள்ளிட்ட மீன்கள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக 2 நாள்கள் மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மீன் வகைகள் ஏற்றுமதி இல்லாததால் ரூ.5 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×