search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோட்டில் பழைய மஞ்சள் அதிக அளவில் விற்பனைக்கு வருவதால் விலை குறைந்தது- விவசாயிகள் கவலை
    X

    ஈரோட்டில் பழைய மஞ்சள் அதிக அளவில் விற்பனைக்கு வருவதால் விலை குறைந்தது- விவசாயிகள் கவலை

    • தீபாவளி பண்டிகையின்போது, ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை உயர்ந்தது.
    • தமிழகத்தில் சராசரியாக ஓராண்டில் 8 முதல் 10 லட்சம் மூட்டை மஞ்சள் விளையும்.

    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, 4 இடங்களில் மஞ்சள் ஏல முறை விற்பனை நடக்கிறது. இங்கு தினமும், 3,000 முதல், 4,500 மூட்டை மஞ்சள் விற்பனையாகும்.

    நேற்றைய நிலையில் விரலி மஞ்சள் குவிண்டால், 5,429 ரூபாய் முதல், 8,150 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள், 4,746 ரூபாய் முதல், 7,159 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது.

    தற்போதைய விலை நிலவரம் குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் ராஜமாணிக்கம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையின்போது, ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை உயர்ந்தது. அதன்பின் தற்போது வரை விலை உயரவில்லை.

    தற்போது வரை மார்க்கெட்டுக்கு அதிகமாக பழைய மஞ்சள் மட்டுமே விற்பனைக்கு வருவதால், விலையில் உயர்வு ஏற்படவில்லை. தற்போது, 80 முதல், 85 சதவீதம் பழைய மஞ்சளும், 20 முதல், 30 சதவீதம் புதியவை வரத்தாகிறது.

    பழைய மஞ்சள், புதிய மஞ்சள் என தனித்தனியாக விற்பனை செய்ய இயலாது. கலந்து விற்பனையாவதால், விலையில் மாற்றம் இல்லை. ஈரோடு மாவட்டத்தில் புதிய மஞ்சள் வரத்து குறைந்த நிலையில், மஹராஷ்டிராவில் வரத்தாகும் புதிய மஞ்சளை நம்பி, ஈரோடு மார்க்கெட் செயல்படுகிறது.

    தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்த புதிய மஞ்சள் 90 சதவீதம் விற்பனை செய்துவிட்டனர். பழைய மஞ்சள் இருப்பில் உள்ளதால், அவற்றை விற்பனைக்கு அதிகமாக கொண்டு வருகின்றனர்.

    தற்போதைய நிலையில் தமிழகத்தில், 65 கிலோ எடை கொண்ட, 5 லட்சம் மூட்டை வரை பழைய மஞ்சள் உள்ளது.

    தவிர, ஈரோட்டில் உள்ள மஞ்சள் மார்க்கெட்டுக்கு வேலுார், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, ஆத்தூர், சேலம், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இம்மஞ்சள் தமிழகத்துக்கு மட்டுமின்றி, டெல்லி, கொல்கத்தா, பீகார் போன்ற வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

    தமிழகத்தில் சராசரியாக ஓராண்டில் 8 முதல் 10 லட்சம் மூட்டை மஞ்சள் விளையும். இதில், 80 சதவீதம் ஈரோடு மாவட்டத்தில் விளைவிக்கப்படும். கடந்தாண்டும், நடப்பாண்டிலும் மழை அதிகமாக உள்ளதால், இந்தாண்டு தமிழகத்தில் கூடுதலாக மஞ்சள் பயிரிட்டுள்ளனர். இதனால், 10 முதல், 12 லட்சம் மூட்டை மஞ்சள் வரத்தாகும் என எதிர்பார்ப்பு உள்ளது.

    இதனால் புதிய மஞ்சள் வரத்தாகும்போது விலை உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×