search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலி சினிமா இயக்குநர் இளம்பெண்களை மயக்கியது எப்படி?- புது தகவல்கள்
    X

    வேல்சத்ரியன்

    போலி சினிமா இயக்குநர் இளம்பெண்களை மயக்கியது எப்படி?- புது தகவல்கள்

    • வேல்சத்ரியன் புதிதாக ‘நோ’ என்ற பெயரில் சினிமா படம் எடுப்பதற்கு துணை நடிகை தேவை என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி உள்ளார்.
    • சினிமா அலுவலகத்துக்கு அந்த பெண்களை வரவழைத்து ஆபாசமாகவும், அத்துமீறியும் நடந்து இருக்கிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் வேல்சத்ரியன் (வயது 38). இவர் சேலம் ஏ.வி.ஆர்.ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் சினிமா கம்பெனி நடத்தி வந்தார்.

    இவர் சினிமா படம் எடுப்பதாக கூறி பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர்களை ஆபாசமாக படம் எடுத்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து வேல்சத்ரியன், அவரது உதவியாளர் ஜெயஜோதி (23) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வேல்சத்ரியன் நடத்திய அலுவலகத்தில் சோதனை செய்தபோது கம்ப்யூட்டர், பென்டிரைவ், ஹார்டு டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இளம்பண்களிள் அரை நிர்வாண படங்கள் உள்பட பல படங்கள் இருந்தன.

    இதையடுத்து சிறையில் உள்ள வேல் சத்ரியனை, போலீசார் 6 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் புது புது தகவல்கள் வெளியாகி உள்ளது.

    வேல்சத்ரியன் புதிதாக 'நோ' என்ற பெயரில் சினிமா படம் எடுப்பதற்கு துணை நடிகை தேவை என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி உள்ளார். இதனை பார்த்து பல பெண்கள் சினிமா வாய்ப்பு கேட்டு வேல் சத்ரியனை நாடி உள்ளனர். அப்போது வேல்சத்ரியன் முதலில் நல்லவர் போல் பேசி அந்த பெண்களை நம்ப வைத்துள்ளார்.

    மேலும் தன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை உருவாக்கும் விதமாக உதவியாளர் ஜெயஜோதி மற்றும் ஊழியர்களை அந்த பெண்களிடம் பேச வைத்துள்ளார். இது சூப்பர் பட நிறுவனம், இந்த படத்தில் நடித்தால், நீங்கள் பிரபலமாகி விடுவீர்கள் என வார்த்தைகளை அள்ளிவிட்டுள்ளனர்.

    பெண்களின் பயோடேட்டா, புகைப்படங்களை வேல்சத்ரியன் பார்த்து, அதில் அழகான பெண்களை மட்டும் தேர்வு செய்து, அவர்களின் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, அவர்களின் குடும்ப பின்னணியை தெரிந்து கொண்டுள்ளார். குறிப்பாக அவர்களுடைய சமூக சூழல், வசதியானவர்களா?, எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினை வந்து விடுமா? என்பதை எல்லாம் தெரிந்து கொண்டுள்ளனர்.

    இதையடுத்து சினிமா அலுவலகத்துக்கு அந்த பெண்களை வரவழைத்து ஆபாசமாகவும், அத்துமீறியும் நடந்து இருக்கிறார். சினிமா அலுவலகத்தில் நடக்கும் அந்தரங்க நிகழ்வுகளை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டி வேல்சத்ரியன், அங்குள்ள ஊழியர்களுக்கு மது வாங்கி கொடுத்து வந்துள்ளார்.

    மேலும், பெண்களை மிரட்டுவதற்கு வேல்சத்ரியனின் நண்பர்களும் உதவி செய்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்ததும் வேல்சத்ரியன், நண்பர்களுடன் மது குடிப்பது வழக்கம். அப்போது வேல்சத்ரியனுக்கு பெண்களை எப்படி மயக்குவது எப்படி? அவர்களிடம் எப்படி பணம் பறிப்பது? போன்ற பல ஆலோசனைகளை வழங்கி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து வேல்சத்ரியனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வேல்சத்ரியனுக்கு உதவிய நண்பர்களின் பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர். அவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    Next Story
    ×