search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முட்டை விலை 415 காசுகளாக நிர்ணயம்: பண்ணையாளர்கள் கவலை
    X

    முட்டை விலை 415 காசுகளாக நிர்ணயம்: பண்ணையாளர்கள் கவலை

    • கடந்த மாதம் ஆகஸ்ட் 29-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.30-ல் இருந்து ரூ.4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
    • பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.120 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

    சேலம்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் ஆகஸ்ட் 29-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.30-ல் இருந்து ரூ.4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.15 ஆக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருவதால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 490, பர்வாலா 472, பெங்களூரு 450, டெல்லி 490, ஐதராபாத் 450, மும்பை 505, மைசூரு 450, விஜயவாடா 475, ஹொஸ்பேட் 410, கொல்கத்தா 550.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.120 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    Next Story
    ×