search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஞாயிறு விடுமுறையையொட்டி ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்
    X

    ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் திரண்ட பக்தர்கள் கூட்டம்.

    ஞாயிறு விடுமுறையையொட்டி ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்

    • புத்துணர்வு கிடைப்பதால் ராமேசுவரத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • 12 ஜோதிர் லிங்கங்களில் ஒரு லிங்கம் ராமேசுவரம் கோவிலில் மூலவர் சன்னதிக்கு அருகில் உள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் உள்ள முக்கிய இந்து கோவில்களில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் முக்கியமானதாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் அதிகளவில் வருகை தருவார்கள்.

    தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியும், கோவிலில் அமைந்துள்ள தீர்த்த கிணறுகளில் நீராடியும் சாமி தரிசனம் செய்கின்றனர். இதன் மூலம் புத்துணர்வு கிடைப்பதால் ராமேசுவரத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    மேலும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காகவும், பல்வேறு தோஷ நிவர்த்திக்காக பரிகார பூஜைகள் செய்யவும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர்.

    இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வந்துள்ளனர். அவர்கள் அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி ராமநாதசுவாமி கோவிலில் ஒவ்வொரு சன்னதியாக சென்று தரிசனம் செய்தனர்.

    12 ஜோதிர் லிங்கங்களில் ஒரு லிங்கம் ராமேசுவரம் கோவிலில் மூலவர் சன்னதிக்கு அருகில் உள்ளது. இந்த ஜோதிர் லிங்கத்தை வழிபட பக்தர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இதே போல் நடராஜர் சன்னதியில் பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சம் மூலம் சுவாமியை சுற்றி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நடராஜரை வழிபட்டால் பாவம் தீரும் என்று கூறப்படுவதால் அங்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வெளிநாட்டு பக்தர்கள் சிலரும் சாமி தரிசனம் செய்தனர். சிலர் கோவிலில் விற்பனை செய்யப்படும் தீர்த்தங்களை வாங்கி சென்றனர்.

    இதனால் ராமேசுவரம் இன்று திருவிழா கோலம் பூண்டு இருந்தது. கோவில் பகுதியில் உள்ள கடைகளில் கடல் சார்ந்த பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்தது. பாசி மாலை, சங்கு உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    Next Story
    ×