search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து 1.60 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
    X

    தொடர் விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து 1.60 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

    • சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர் சொந்த ஊருக்கு படையெடுத்தனர்.
    • சென்னையில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் பயணிகள் வெளியூர் புறப்பட்டு சென்றனர்.

    போரூர்:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதை முன்னிட்டு இன்று, நாளை சேர்த்து மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர் சொந்த ஊருக்கு படையெடுத்தனர்.

    பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    முக்கிய ரெயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்தது. ஆம்னி பஸ்களில் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் அரசு பஸ்களில் பயணம் செய்யவே தற்போது அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    நேற்று இரவு முதலே கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு செய்த பயணிகளை தவிர்த்து கடைசி நேரத்தில் பயணம் செய்ய திட்டமிட்டவர்கள் என ஏராளமானோர் ஒரே நேரத்தில் தங்களது குடும்பத்துடன் குவிந்ததால் பஸ் நிலையத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் வசதிக்காக வழக்கமாக தினசரி இயக்கப்படும் 2200 பஸ்களுடன் நேற்று கூடுதலாக 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதன்மூலம் சென்னையில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் பயணிகள் வெளியூர் புறப்பட்டு சென்றனர். இன்று வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக மேலும் 850 சிறப்பு பஸ்கள் வரை இயக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    எழும்பூர், தாம்பரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எழும்பூர் ரெயில் நிலையம் வழக்கத்தை விட பயணிகள் கூட்டத்தால் திணறியது. தாம்பரம், பெருங்களத்தூரில் அரசு பஸ்களில் செல்லவும் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

    Next Story
    ×