search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது
    X

    முகமது இத்ரீஸ்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது

    • கார் குண்டு வெடிப்பு வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபினின் நெருங்கிய நண்பர் தான் தற்போது கைதாகி உள்ள முகமது இத்ரீஸ்.

    கோவை:

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் இதில் பலியானார்.

    இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது.

    இந்த வழக்கில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.

    என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி, உமர் பரூக், பெரோஸ்கான், முகமது தவுபிக் ஆகியோரையும் கைது செய்தனர். இதுவரை கார் குண்டு வெடிப்பு வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட 11 பேர் மீது அண்மையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது இத்ரீஸ்(வயது25) என்பவருக்கும் தொடர்பு இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முடிவில் நேற்று அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் அவரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர்.

    கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபினின் நெருங்கிய நண்பர் தான் தற்போது கைதாகி உள்ள முகமது இத்ரீஸ். இவர் குண்டு வெடிப்பிற்கு முன்பு அதற்கான குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவரவே அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அவரை தொடர்ந்து கண்காணித்தும் வந்தனர்.

    குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக முகமது இத்ரீசின் செல்போன் அழைப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவரிகளிடம் விசாரணை நடத்தியதிலும், முகமது இத்ரீசுக்கு குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதன் காரணமாகவே அவருக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி 2 நாட்களாக விசாரணை நடத்தியதும், விசாரணையின் முடிவில் அவரை கைது செய்ததும் தெரியவந்தது.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட முகமது இத்ரீசை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். அதன்பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட உள்ளார்.

    கைதான முகமது இத்ரீசிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளும் நடந்து வருகிறது.

    கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 12-வது நபராக முகமது இத்ரீஸ் என்பவரும் கைதாகி உள்ளது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×