search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாலையில் சென்றபோது தீப்பிடித்த கார் : உயிர் தப்பிய 5 பேர்
    X

    சாலையில் சென்றபோது தீப்பிடித்த கார் : உயிர் தப்பிய 5 பேர்

    • ஓடும் காரில் தீ பிடித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்தினார்.
    • தீ மளமளவென கார் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

    வாழப்பாடி:

    சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு இன்று அதிகாலை சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார்.

    சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மேம்பாலத்தில் சென்றபோது திடீரென கார் முன்பகுதி தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது.

    ஓடும் காரில் தீ பிடித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்தினார். இதையடுத்து 5 பேரும் கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதற்கிடையே அந்த வழியாக வந்த பொதுமக்கள் கார் என்ஜின் வெடித்து விடுமோ? என்ற அச்சத்தில் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர். அதன் அருகில் யாரும் செல்லவில்லை.

    தீ மளமளவென கார் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் தீப்பிடித்து எரிந்ததில் கார் முழுவதும் எலும்பு கூடாக காணப்பட்டது. பின்னர் அந்த காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்-சென்னை பிரதான தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஓடும் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×