என் மலர்
தமிழ்நாடு

பெசன்ட் நகரில் இன்று மாலை தொடங்குகிறது: அன்னை வேளாங்கண்ணி ஆலய கொடியேற்ற திருவிழா
- திருவிழா அடுத்த மாதம் 8-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
- பெசன்ட் நகரை நோக்கி காலையில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
சென்னை:
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 50-வது ஆண்டு பொன் விழா நிறைவு திருவிழா இன்று மாலை 5.45 மணிக்கு சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி தலைமையில் கொடியேற்ற நிகழ்வு, சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.
இந்த திருவிழா அடுத்த மாதம் 8-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. கொடியேற்ற நிகழ்ச்சியை யொட்டி காலை 5.30 மணிக்கு திருப்பலி நடந்தது. 11 மணி வரை நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு புனித ஆரோக்கிய மாதா கொடி-தேர்பவனி அதனை தொடர்ந்து கொடியேற்ற சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.
நாளை (புதன்கிழமை) உழைப்பாளர் விழா, 31-ந் தேதி நலம் பெறும் விழா, செப்டம்பர் 1-ந் தேதி இளையோர் விழா, 2-ந் தேதி பக்த சபை விழா, 3-ந் தேதி நற்கருணை பெருவிழா, 4-ந் தேதி இறையழைத்தல் தினம், 5-ந் தேதி ஆசிரியர்கள் தினம், 6-ந் தேதி குடும்ப விழா நடைபெறுகிறது.
செப்டம்பர் 7-ந் தேதி தேர்த் திருவிழா நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ஜெப மாலை, நவநாள் ஜெபம், ஆடம்பர கூட்டுத் திருப்பலி, அன்னையின் ஆடம்பர தேர்ப்பவனி பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடக்கிறது.
8-ந் தேதி அன்னையின் பெருவிழா நடக்கிறது. அதிகாலை 2 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை திருப்பலி தொடர்ந்து நடைபெறுகிறது.
மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் ஜெபம் நன்றி திருப்பலி, அன்னைக்கு முடிசூட்டு விழா, திருக்கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய கொடியேற்ற நிகழ்ச்சி தொடங்குவதால் இதில் பங்கேற்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இறை பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
பெசன்ட் நகரை நோக்கி காலையில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். குடும்பம் குடும்பமாக, குழுவாக அவர்கள் சாலையோரமாக நடந்து சென்றனர். அடையாறு பாலம் அருகில் முறைப்படுத்தப்பட்டு வரிசையாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.