search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணா பல்கலைக்கழக கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி
    X

    அண்ணா பல்கலைக்கழக கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி

    • எல்லா பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரி தேர்வு கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
    • சிண்டிகேட் குழுவினருக்கு பழைய கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு குறித்து துணைவேந்தர் வேல்ராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நேற்று சில கல்லூரிகளில் தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்வு என்று மாணவர்கள் கூறியுள்ளார்கள். 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. செலவுகள் அதிகம், தேர்வு தாள்களை திருத்த கட்டணம் அதிகம், இதர செலவுகள் உள்ளது.

    நாட்டின் வளர்ச்சிப்படி பார்த்தால் 10 ஆண்டுகளுக்கு பிறகு கட்டண உயர்வு என்பது 100 சதவீதமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் 9 ஆண்டுகளுக்கு பிறகு 50 சதவீதம் கூட்டியுள்ளோம். ஜனவரி மாதம் முடிவு எடுக்கப்பட்டு மே மாதம் கொடுக்கப்பட்டது. பல கல்லூரிகளில் கட்டணம் வசூலித்து விட்டார்கள்.

    இந்த கட்டண உயர்வு குறித்து அமைச்சருக்கு தெரியாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்வு என்று கேள்வி வந்ததால் ஏன் உயர்த்தினீர்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேட்டார்.

    மேலும் பழைய கட்டணத்தையே இம்முறை வசூலிக்க கூறியுள்ளார். அதனால் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த செமஸ்டரில் இருந்து புதிய தேர்வு கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது மாணவர்கள் கல்லூரிகளில் செலுத்திய கூடுதல் தேர்வு கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

    எல்லா பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரி தேர்வு கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். இது தொடர்பான கூட்டம் விரைவில் நடத்தப்படும்.

    அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரி தேர்வு கட்டணம் உயர்வது சரியாக இருக்கும். சிண்டிகேட் குழுவினருக்கு பழைய கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×