search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அடுத்தடுத்து பன்றிகள் பலி- முதுமலை வனப்பகுதி பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றிகாய்ச்சல் உறுதியானது
    X

    அடுத்தடுத்து பன்றிகள் பலி- முதுமலை வனப்பகுதி பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றிகாய்ச்சல் உறுதியானது

    • பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏராளமான காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
    • இறந்த பன்றிகளின் உடற்பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள முதுமலை புலிகள் காப்பகமும், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

    இந்நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏராளமான காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

    கர்நாடக வனத்துறையினர் இறந்த பன்றிகளை பிரேத பரிசோதனை செய்து அதன் உடல் பாகங்களின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தனர். அவற்றை இந்திய கால்நடை ஆய்வு மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த ஆய்வில் காட்டுப்பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் இந்நோய் மேலும் பரவாத வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துடன் முதுமலை புலிகள் காப்பகமும் இணைந்து அமைந்துள்ளதால், இங்கும் பன்றிகள் அதிகளவு இறந்துள்ளனவா? என ஆய்வு செய்யப்பட்டது. இதில் அண்மையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 15 காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து இறந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவற்றின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு இந்திய கால்நடை ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைகழகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து நோய் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.

    நேற்று மேலும் 2 காட்டு பன்றிகள் இறந்து கிடந்தது. உடனடியாக அவை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது.

    இதற்கிடையே இறந்த பன்றிகளின் உடற்பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை வனப்பகுதியில் உள்ள பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது.

    இதனை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×