search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பஸ்சில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட ஆண் குழந்தை- சைல்டு லைன் அமைப்பினர் மீட்டனர்
    X

    பேருந்தின் இருக்கையில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட குழந்தை.

    பஸ்சில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட ஆண் குழந்தை- சைல்டு லைன் அமைப்பினர் மீட்டனர்

    • குழந்தை பிறந்து சுமார் 10 நாட்களே இருக்கும் என்று கூறப்பட்டது.
    • குழந்தையை மீட்டுச் சென்று குழந்தைகள் நலக்குழு ஆலோசனைப்படி திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

    திருச்சி:

    புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு இரவு சுமார் 8.30 மணியளவில் அரசு பேருந்து ஒன்று வந்தது. பேருந்து நிலையத்தை அடைந்ததும் அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனர்.

    இதையடுத்து டிரைவர், கண்டக்டர் இருவரும் பேருந்தை பிளாட்பாரத்தில் நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்காக சென்றனர். இதையடுத்து மீண்டும் பஸ்சை இயக்க அதில் ஏறியபோது பஸ்சுக்குள் இருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. ஆனால் பயணிகள் யாரும் இல்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், கண்டக்டர் இருவரும் சென்று பார்த்தபோது பஸ்சின் பின்புற இருக்கையில் ஆண் குழந்தை ஒன்று ஆதரவற்ற நிலையில் கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் சுற்று முற்றும் பார்த்தும், விசாரித்தும் யாரும் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி வரவில்லை.

    அந்த குழந்தை பிறந்து சுமார் 10 நாட்களே இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும் குழந்தை கிடந்த இருக்கையின் அருகே ஒரு பையில் பால் பாட்டில், உடைகள் மற்றும் பேம்பர்ஸ் ஆகியவையும் இருந்தன.

    எனவே புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிதான் யாரோ குழந்தையை விட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பேருந்து ஊழியர்கள் அந்த குழந்தையை மீட்டு பஸ் நிலைய புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடனடியாக அவர்களும் குழந்தை பசியில் இருக்கும் என்பதை அறிந்து பாட்டிலில் இருந்த பாலை கொடுத்தனர்.

    பின்னர் இதுபற்றி சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், ஆலோசகர் பிரியா ஆகியோர் வந்து குழந்தையை மீட்டுச் சென்று குழந்தைகள் நலக்குழு ஆலோசனைப்படி திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

    அங்கு சிசு வார்டில் குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்க்குபேட்டரில் வைத்து சிகிச்சையும் அளிக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே குழந்தையை விட்டுச்சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×