search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் எச்சரிக்கையுடன் நிறுத்தப்பட்டதால் 800 பேர் உயிர் தப்பினார்கள்
    X

    திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்

    செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் எச்சரிக்கையுடன் நிறுத்தப்பட்டதால் 800 பேர் உயிர் தப்பினார்கள்

    • தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில் பாதைக்கு மேல் ஒரு மீட்டர் அளவுக்கு வெள்ள நீர் தேங்கியது.
    • செய்துங்கநல்லூர்-ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையங்கள் இடையே 12.16 கி.மீ தூரத்திற்கு பாதையில் சரளைக் கற்கள் வெள்ள நீரால் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் சரளைக்கற்களை வெள்ள நீர் அடித்துச் சென்றுள்ளது.

    தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில் பாதைக்கு மேல் ஒரு மீட்டர் அளவுக்கு வெள்ள நீர் தேங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டப்பாறை மீளவிட்டான் ரெயில் நிலையங்களுக்கிடையே 7.47 கி.மீ தூர ரெயில் பாதையில் உள்ள 9 நீர்வழிப் பாலங்களில் அபாயகர அளவில் வெள்ளநீர் சென்றது.

    செய்துங்கநல்லூர்-ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையங்கள் இடையே 12.16 கி.மீ தூரத்திற்கு பாதையில் சரளைக் கற்கள் வெள்ள நீரால் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இதை அறியாமல் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் (17-ந்தேதி) இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு வந்தது. அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டம்-செய்துங்கநல்லூர் ரெயில் பாதையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதால் 33 கிமீ பயணத்திற்கு பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இரவு 9.19 மணிக்கு நிறுத்தப்பட்டது.

    இந்த ரெயிலில் சுமார் 800 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அரசு அதிகாரிகள் உதவியுடன் நேற்று அதிகாலை 300 பயணிகள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த மீட்பு பணியின்போது சாலையில் உடைப்பு ஏற்பட்டதால், மீதமுள்ள 500 பயணிகளை மீட்க இயலாமல் போனது. இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து உடனடியாக தேசிய பேரிடர் மீட்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் குழுவும் சாலையில் ஏற்பட்ட பல்வேறு உடைப்புகள் காரணமாக, ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம் சென்று சேர முடியவில்லை.

    ரெயில்வே நிர்வாகத்தின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க, மீட்பு பணிகளுக்கு செல்லத் தயாராக இருந்த தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் அதிக மழை, வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம் சென்று சேர முடியாத நிலை தொடர்ந்து நீடித்தது.

    தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் உதவியுடன், பள்ளியில் தங்க வைக்கப்பட்ட 300 பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்ற தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன.

    ரெயிலில் சிக்கி உள்ள 500 பயணிகளுக்கு சாலை மார்க்கமாக உணவு கொடுக்க வழியில்லாத காரணத்தால் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருள்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த ஹெலிகாப்டர், ஸ்ரீவைகுண்டம் நெருங்கும்போது வானிலை சாதகமாக இல்லாத காரணத்தினால் திரும்பிச் சென்றது. இதனால்-ரெயில் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

    இன்று 2-வது நாளாக ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்க முயற்சி நடந்தது. ஆனால் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

    இதனால் பேரிடர் மீட்புக் குழுவினர் கயிறு கட்டி தலையில் உணவு எடுத்துச்சென்று ரெயில் பயணிகளிடம் கொடுத்தனர்.

    தொடர் மழை மற்றும் சாலை போக்குவரத்து துண்டிப்பு காரணமாக, பயணிகளை வெளியேற்றுவதில் சிரமம் நீடிக்கிறது. எனவே அவர்கள் ரெயில் பெட்டிகளிலும் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பாக தங்குவதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

    Next Story
    ×