search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு
    X

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள்.

    எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு

    • ராமேசுவரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே உள்ள கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • மீனவர்கள் இன்று ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பதும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும், எல்லைதாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்து செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

    ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

    நேற்று மாலை கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே உள்ள கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் இங்கிருந்து செல்லுங்கள் என்று மிரட்டி விரட்டியடித்தனர்.

    மேலும் 5-க்கும் மேற்பட்ட படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கியதோடு, மீன்பிடி சாதனங்கள், வலைகளை சேதப்படுத்தி, படகில் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

    அப்போது நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மைக்கேல் ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் அதிலிருந்த கிளிண்டன், பேதுகு, வினிஸ்டன், தயான், மரியான், தானி, ஆனஸ்ட் ஆகிய 7 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    சிறைபிடிக்கப்பட்ட அவர்கள் இலங்கை காரை நகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன்பின் அவர்கள் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    மீனவர்கள் இன்று ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் படகு ஒன்றுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×