search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு- ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    X

    அரசு விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு- ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    • அதிர்ச்சியடைந்த விடுதி வார்டன் உடனடியாக 5 மாணவர்களையும் ஆம்புலன்சு மூலமாக மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
    • சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தொண்டாமுத்தூரில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 34 மாணவர்கள் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

    நேற்று இரவு விடுதியில் 20 மாணவர்கள் மட்டும் இருந்தனர். விடுதியில் மாணவர்களுக்கு நேற்று இரவு 8.30 மணியளவில் சாப்பாடு, ரசம் மற்றும் முட்டை ஆகியவை உணவாக வழங்கப்பட்டது.

    இதில் விடுதியில் உள்ள திருப்பூர் உடுமலையை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் சபரீஸ் (வயது 12), ஆனைமலை கரியன்செட்டிப் பாளையத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் முத்துகணேஷ் (12), மீனாட்சிபுரத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஹரிகரன் (15), வால்பாறையை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் முனீஸ் (16), பொள்ளாச்சி காளிபாளையத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் சிவபிரசாந்த் (12) ஆகிய 5 மாணவர்கள் மதியம் மீதி இருந்த பாசிப்பருப்பு குழம்பை எடுத்து சாப்பிட்டனர்.

    சிறிது நேரத்தில் 5 மாணவர்களுக்கும் வயிற்று வலியுடன் வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து 5 மாணவர்களும் ஒருவர் பின் ஒருவராக மயங்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி வார்டன் உடனடியாக 5 மாணவர்களையும் ஆம்புலன்சு மூலமாக மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு டாக்டர்கள் மாணவர்களை பரிசோதனை செய்தபோது கெட்டுபோன உணவை மாணவர்கள் சாப்பிட்டதால் வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து டாக்டர்கள் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×