search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையில் இருந்து இன்று காலை 539 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட வந்தே பாரத் ரெயில்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நெல்லையில் இருந்து இன்று காலை 539 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட வந்தே பாரத் ரெயில்

    • ரெயிலில் எக்சிகியூட்டிவ் பெட்டியில் 24 பயணிகளும், சாதாரண ஏசி பெட்டிகளில் 252 பயணிகளும் நெல்லையில் இருந்து பயணித்தனர்.
    • மறுமார்க்கமாக இன்று மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயில் புறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயிலை கடந்த 24-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அன்றைய தினம் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்ட நிலையில், மறுநாள்(25-ந்தேதி) சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நெல்லை வந்தடைந்தது.

    இந்நிலையில் இன்று ரெயில்வே கால அட்டவணைப்படி நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. ஏற்கனவே இந்த ரெயிலில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகள் பொங்கல் வரையிலும் விற்றுத்தீர்ந்து விட்ட நிலையில் இன்று காலை நெல்லையில் இருந்து பயணிகளுடன் தனது பயணத்தை வந்தே பாரத் முதல் முறையாக தொடங்கியது.

    இந்த ரெயிலில் எக்சிகியூட்டிவ் பெட்டியில் 24 பயணிகளும், சாதாரண ஏசி பெட்டிகளில் 252 பயணிகளும் நெல்லையில் இருந்து பயணித்தனர். இதேபோல் மதுரையில் இருந்து எக்சிகியூட்டிவ் பெட்டியில் 10 பேரும், சாதாரண ஏசி பெட்டியில் 97 பேரும் சென்னைக்கு புறப்பட்டனர். முதல் நாளான இன்று மொத்தமாக எக்சிகியூட்டிவ் பெட்டியில் 52 பேரும், சாதாரண ஏசி பெட்டியில் 487 பேரும் என மொத்தம் 539 பேருடன் வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

    மறுமார்க்கமாக இன்று மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயில் புறப்படுகிறது. அதிலும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

    இதற்கிடையே இரவு 10.40 மணிக்கு இந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை அடைவதால் நெல்லை மாவட்டம் திசையன்விளை, ராதாபுரம், வள்ளியூர், அம்பை, சேரன்மகாதேவி, தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×