search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரத்திற்கு இன்று மேலும் 4 இலங்கை அகதிகள் வருகை- ஏராளமானோர் வாழ வழியின்றி தவிப்பதாக கண்ணீர்
    X

    ராமேசுவரத்திற்கு இன்று மேலும் 4 இலங்கை அகதிகள் வருகை- ஏராளமானோர் வாழ வழியின்றி தவிப்பதாக கண்ணீர்

    • கடற்கரை அருகே இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • இலங்கை அகதிகள் 4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக் கடி காரணமாக பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அந்த நாட்டு அரசு திணறியது.

    இதன் காரணமாக அரிசி முதல் காய்கறி வரை அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. இதனால் அங்கு வாழ்வாதாரம் இழந்தும், வாழ வழியின்றியும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவது தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இதுவரை 265 பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரம் கோதண்டராமர் கோவில் பகுதி கடற்கரை அருகே இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் (வயது 36), அவரது மனைவி மேரி (34), மகள்கள் கிருத்திகா (7), கிருஷ்மா (4) என்பது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரும் மன்னார்வளைகுடா பகுதியில் இருந்து ரூ.1 லட்சம் பணம் கொடுத்து இன்று அதிகாலை 1 மணிக்கு தமிழகம் வந்ததாக தெரிவித்தனர்.

    அகதிகளாக வந்தவர்கள் கூறுகையில், வறுமையின் காரணமாகவும், தொடர்ந்து அங்கு வாழ வழியில்லாமல் போனதாலும் இங்கு வந்து தஞ்சமடைந்து உள்ளோம். தமிழகத்தில் ஏதாவது பிழைப்பு தேடி குடும்பம் நடத்தலாம் என்ற நம்பிக்கையுடன் முடிவு செய்து பிளாஸ்டிக் படகில் ரூ.1 லட்சம் பணம் கொடுத்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் எங்களை போன்று ஏராளமானவர்கள் தமிழகம் வரத்துடிக்கிறார்கள். ஆனால் படகுக்கு கொடுக்க பணம் கிடைக்காததால் வாழவும் முடியாமல், தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடியாமல் தவித்து வருவதாக கண்ணீருடன் கூறினர்.

    தொடர்ந்து இலங்கை அகதிகள் 4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள். கடந்த 2022 ஆண்டு முதல் இன்றைய தேதி வரை இலங்கையில் இருந்து 269 பேர் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×