search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிக்கராயபுரத்தில் 3 கல்குவாரிகள் மழைநீரால் முழுவதும் நிரம்பியது
    X

    கல்குவாரிகள் தண்ணீரால் நிரம்பி இருப்பதை காணலாம்

    சிக்கராயபுரத்தில் 3 கல்குவாரிகள் மழைநீரால் முழுவதும் நிரம்பியது

    • குடிநீர் தேவையை சமாளிக்க பூந்தமல்லி அருகே சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் தேங்கி இருந்த தண்ணீரும் பெரிதும் உதவியது.
    • மாண்டஸ் புயலின்போது கனமழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் மழை நீர் வெளியேறி கல்குவாரி குட்டையில் சேர்ந்து வருகிறது.

    பூந்தமல்லி:

    சென்னையில் கடந்த 2019-ம் ஆண்டு குடிநீர் எரிகளில் தண்ணீர் வற்றியதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

    மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

    அப்போது குடிநீர் தேவையை சமாளிக்க பூந்தமல்லி அருகே சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் தேங்கி இருந்த தண்ணீரும் பெரிதும் உதவியது. கல்குவாரி தண்ணீரை சுத்திகரித்து அனுப்பினர்.

    இதைத்தொடர்ந்து சென்னை நகரில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைளை அரசு தீவிரப்படுத்தியது. ஏரி, குளங்களில் கூடுதல் தண்ணீரை சேமிக்க தூர்வாரி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பூந்தமல்லி, மாங்காடு பகுதியில் தேங்கும் வெள்ள நீரை சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சிக்கராயபுரத்தில் உள்ள கல் குவாரியில் தண்ணீரை சேமிக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது.

    பருவமழை காலங்களில் பூந்தமல்லி நகராட்சி, மலையம்பாக்கம், வரதராஜபுரம், மேப்பூர், நசரத்பேட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் பூவிருந்தமல்லி, மலையம்பாக்கம் ஊராட்சி, மாங்காடு நகராட்சியில் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக மாங்காடு நகராட்சியில் பெரும் பாதிப்பை உண்டாகியது.

    இதனைத்தொடர்ந்து பூந்தமல்லி, மாங்காடு நகராட்சியில் ஏற்படும் வெள்ள நீரை சிக்கராயபுரம் கல்குவாரியில் சேமிக்கும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வந்தனர். அமைச்சர்கள் கே.என்.நேரு தா.மோ.அன்பரசன், சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு செய்து இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டனர். தலைமை செயலாளர் இறையன்பு உட்பட அதிகாரிகளும் ஆய்வு செய்து போர்க்கால நடவடிக்கையில் கால்வாய் அமைக்கும் பணி முடிக்கப்பட்டது.

    பூந்தமல்லியில் இருந்து சிக்கராயபுரம் வரை 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தனியாக வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 30 அடி அகலத்தில் கால்வாய்கள் அமைத்தனர். தற்போது பெய்துவரும் பலத்த மழை காரணமாக இந்த கால்வாய் வழியாக சென்ற மழைநீர் கல்குவாரி பள்ளத்தில் சென்று சேர்ந்தது. தொடர் மழை காரணமாக இங்குள்ள 3 கல்குவாரி குட்டைகள் முழுவதும் நிரம்பி உள்ளது.

    மாண்டஸ் புயலின்போது கனமழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் மழை நீர் வெளியேறி கல்குவாரி குட்டையில் சேர்ந்து வருகிறது.

    சிக்கராயபுரம் கல்குவாரியை பொருத்தவரை சுமார் 1 டி.எம்.சி வரை சேமிக்கும் அளவிற்கு ராட்சத பள்ளங்கள் உள்ளது. தற்போது வரை 3 கல்குவாரி குட்டை கள் நிரம்பி உள்ளதால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்த தண்ணீரை கோடைக்காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியும் என்று அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சிக்கராயுபுரம் கல்குவாரி குட்டையில் தண்ணீரை தேக்கும் திட்டம் முழுபலனை கொடுத்து இருப்பதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். கல்குவாரி குட்டைகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை முறையாக பராமரித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இதேபோல் தண்ணீரை சேமிக்கும் புதிய ஏரிகளை அரசு உருவாக்கி வரும் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×