search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூவாகம் கூத்தாண்டவர் கோவில்
    X
    கூவாகம் கூத்தாண்டவர் கோவில்

    கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நாளை தேரோட்டம்

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று மாலை கூத்தாண்டவர் கோவிலில் நடைபெறுகிறது.
    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கூத்தாண்டவர் கோவில் திருவிழாவுக்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து உள்ளதால் சித்திரை திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 5-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவுகள், சாமி வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று (19-ந் தேதி) மாலை கூத்தாண்டவர் கோவிலில் நடைபெறுகிறது.

    அப்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கோவில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொள்வார்கள்.

    இதனை தொடர்ந்து கோவில் அருகில் மலை போல் கற்பூரம் ஏற்றி விடிய விடிய கும்மி அடித்து அரவாணின் பெருமைகளை கூறி பாட்டுப்பாடி மகிழ்வார்கள். நாளை (20-ந் தேதி) காலை சித்திரை தேரோட்டமும், இதனை தொடர்ந்து பந்தலடியில் அரவாண் களப்பலிக்கு பிறகு திருநங்கைகள் கோயில் பூசாரியிடம் கட்டிய தாலியை அறுத்து வெள்ளை புடவை உடுத்திக்கொண்டு சோகத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

    21-ந் தேதி விடையாத்தியும், 22-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். விழாவையொட்டி ஏராளமான திருநங்கைகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    Next Story
    ×