search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராஜபாளையம் அருகே காய்ச்சலுக்கு ஊசி போட்ட புதுமாப்பிள்ளை பலி

    ராஜபாளையம் அருகே திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் முகேஷ் (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஆயத்த ஆடை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு நேற்று மாலை 6 மணி அளவில் காய்ச்சல் என்பதால் சிகிச்சை பெறுவதற்காக தளவாய்புரத்தில் உள்ள சுகாதார கூட்டுறவு மருத்துவமனைக்கு சென்றார்.

    அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில் செவிலியர்கள் ஊசி போட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவருக்கு ஊசி ஒத்துக்கொள்ளாமல் வாந்தி வந்துள்ளது. மேலும் ஒரு நரம்பு ஊசி போடப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் அவரது உடல்நிலை மோசமானது. உடனே உறவினர்கள், நண்பர்கள் அவரை ஆட்டோவில் ஏற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முகேஷ் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    முகேஷ் இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் ராஜபாளையம் டி.எஸ்.பி. நாகசங்கர், தெற்கு இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், தளவாய்புரம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சேத்தூர் இன்ஸ்பெக்டர் பவுல் யேசுதாஸ் உள்பட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இறந்த முகேஷுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் மனைவி பூபாலா உள்பட உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. தளவாய்புரம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மருத்துவமனை ஊழியர்களை விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×