என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    லேப்டாப் வாங்க சேமித்த பணத்தை தொழிலாளர்களுக்கு வழங்கிய சிறுமி- கலெக்டர் பாராட்டு

    புதுவையில் லேப்டாப் வாங்க சேமித்த பணத்தை தொழிலாளர்களுக்கு வழங்கிய சிறுமியை கலெக்டர் பாராட்டினார்.
    புதுச்சேரி:

    புதுவை தேங்காய்த்திட்டைச் சேர்ந்தவர் வெள்ளையன். தனியார் நிறுவன ஊழியர்.

    இவருடைய மனைவி வித்யா. இவர்களுக்கு 9 வயதான தியா என்ற மகள் உள்ளார். தியா உப்பளம் இமாகுலேட் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகின்றார்.

    படித்து பட்டம் பெற்று ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பது தியாவின் விருப்பம். அதற்கு லேப்டாப் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று பெற்றோர் கூறினர். இதனால் தியா பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுக்கும் சிறு, சிறு தொகையை உண்டியலில் கடந்த 2 ஆண்டுகளாக சேமித்து வந்தார்.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தொழிலாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியிருப்பதை செய்திகள் மூலம் தியா தெரிந்து கொண்டார். இதனையடுத்து அவர்களுக்கு உதவுவதற்கு தியா முன்வந்தார்.

    இதுகுறித்து தந்தை வெள்ளையனிடம் தெரிவித்தார். அவரும் தனது மகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்தார். அதில் ரூ 24 ஆயிரத்து 347 இருந்தது.

    இதனை ஊரடங்கால் வேலையின்றி தவித்த கைத்தறி நெசவாளர்கள், நாதஸ்வர கலைஞர்கள், பிற மாநில தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்கள் உள்ளிட்ட நலிவுற்ற குடும்பத்தினர் 57 பேரை தேர்வு செய்து அவர்களது குடும்பத்திற்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறிகள், பிஸ்கெட் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார்.

    இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அருண் சிறுமி தியா மற்றும் அவரது பெற்றோரை அழைத்து பாராட்டினார். அப்போது லேப்டாப் வாங்குவதற்கான பணம் செலவாகிவிட்டதே.? என்ன செய்வாய்.? என்று கேட்டதற்கு மீண்டும் சேமிப்பேன், அப்போதும் யாரேனும் பாதிக்கப்பட்டு உதவி கேட்டால் அந்த பணத்தையும் அவர்களுக்கு வழங்கிவிடுவேன் என்றும் தெரிவித்தார்.

    இந்த சிறுமியின் உதவும் மனபான்மையை அனைவரும் பாராட்டினர். மேலும், கலெக்டர் தனது இருக்கையில் தியாவை அமர வைத்து கவுரவபடுத்தினார்.

    Next Story
    ×