search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராலிமலை பஸ் நிலையத்தில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்
    X

    விராலிமலை பஸ் நிலையத்தில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்

    விராலிமலை பஸ் நிலையத்தில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை சரமாரியாக குத்திக்கொன்ற கணவன் போலீசில் சரண் அடைந்தார்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொன்னகாட்டுபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 35). இவரது மனைவி லதா. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    லதா விராலிமலை பஸ் நிலையத்தில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார். வேலுச்சாமி விராலிமலை பஸ் நிலையம் அருகே உள்ள கடைவீதியில் வெற்றிலை வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் லதாவின் நடத்தையில் வேலுச்சாமி சந்தேகப்பட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் பலமுறை அவர்களை சமாதானப்படுத்தி வந்தனர்.

    இன்று காலை லதா, விராலிமலை பஸ் நிலையத்தில் உள்ள பேன்சி கடைக்கு வேலைக்கு சென்று விட்டார். கடையில் வியாபாரத்தை பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வேலுச்சாமி திடீரென லதாவிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லதாவின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கடைக்குள்ளேயே துடிதுடித்து இறந்தார்.

    இதைப்பார்த்த பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடினர். இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.


    இதற்கிடையே மனைவியை கொலை செய்த வேலுச்சாமி நேராக விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே கொலை சம்பவம் நடந்த பஸ் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த லதாவின் தாய் கதறி அழுதார். கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், இலுப்பூர் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி ஆகியோர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    விராலிமலை பஸ் நிலையத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    Next Story
    ×