search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட மகேஸ்வரி, மாசானவடிவு
    X
    கைது செய்யப்பட்ட மகேஸ்வரி, மாசானவடிவு

    கோர்ட்டில் ஜாமீன் பெற போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த மேலும் ஒரு பெண் கைது

    திருப்பூரில் கோர்ட்டில் ஜாமீன் பெற போலி அரசு சான்றிதழ் தயாரித்த மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட சில பகுதிகளில் கோர்ட்டில் ஜாமீன் பெற போலியாக அரசு சான்றிதழ் தயாரித்து விற்பதாக புகார் எழுந்தது.

    இதனை தொடர்ந்து வருவாய் துறையினர் போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டனர். சப்-கலெக்டர் ஷ்வன் குமார் அறிவுரைப்படி தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரன் ஆகியோர் மோசடி கும்பல் பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது திருப்பூர் அவினாசி சாலை எஸ்.ஏ.பி. தியேட்டர் பின்புறம் உள்ள பாரதி நகரில் மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான பியூட்டி பார்லரில் போலி சான்றிதழ் கிடைப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்படி வருவாய் துறையினர் ஏற்பாடு செய்த மணி என்பவர் பியூட்டி பார்லரில் இருந்த மாசாண வடிவு என்ற பெண்ணிடம் சான்றிதழ் கேட்டு பணம் கொடுத்தார்.

    அதன் படி சப்-கலெக்டர் அலுவலகம் வந்த மாசாண வடிவு மணியிடம் அவர் கேட்டபடி சான்றிதழ் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் மாசாண வடிவை கைது செய்தனர்.

    பின்னர் அவர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் சப்-கலெக்டர் ஷ்வரன் குமார் விசாரணை நடத்தினார்.

    பறிமுதல் செய்யப்பட்ட போலி சீல் கட்டைகள்.

    மாசாண வடிவு அளித்த தகவலின் பேரில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் மகேஸ்வரியும் கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் இருந்து பல்வேறு அரசு அலுவலகம் மற்றும் அதிகாரிகள் பெயரில் வைத்திருந்த கோபுர சீல், போலி சீல் கட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மகேஸ்வரி நடத்திய பியூட்டி பார்லரில் பேரூராட்சி செயல் அலுவலர், நில அளவை ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி துறை ஆகியோரது பெயரில் போலி முத்திரைகள் கொண்ட சீல் கட்டைகள் இருந்தது.

    மேலும் ஜாமீன் மனு, பட்டா, வாரிசு சான்று, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவைகள் கத்தை, கத்தையாக இருந்தது. அதனையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

    இந்த மோசடியில் வக்கீல், புரோக்கர், மற்றும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    வக்கீல் தன்னிடம் ஜாமீன் கேட்டு வருபவர்களிடம் மகேஸ்வரி நடத்தும் பியூட்டி பார்லருக்கு சென்றால் சான்றிதழ் வாங்கி விடலாம் என பரிந்துரை செய்து அனுப்பி உள்ளார்.

    அதன் படி ஜாமீனுக்கு முயற்சி செய்பவர்கள் மகேஸ்வரியிடம் வந்து சான்றிதழ் பெற்று சென்று உள்ளனர். ஒரு சான்றிதழ் வழங்க ரூ. 8 ஆயிரம் பெற்றுள்ளனர்.

    வக்கீல், புரோக்கர் உள்பட 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். போலி சான்றிதழ் மூலம் எத்தனை பேர் ஜாமீனில் வந்துள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    போலீசாரிடம் மகேஸ்வரி கூறும் போது, திருப்பூரில் தான் இந்த போலி சான்றிதழ், அரசு முத்திரை தயார் செய்ததாக கூறி உள்ளார். அவருக்கு இந்த முத்திரையை தயார் செய்து கொடுத்தது யார்? என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இது குறித்து தாசில்தார் ஜெயக்குமார் கூறியதாவது-

    கோர்ட்டு ஜாமீன் சான்றிதழ் தேவை என மாசாண வடிவிடம் தொடர்பு கொண்ட போது ரூ. 8 ஆயிரம் கேட்டனர். 2,500 பணம் கொடுத்தோம். அதன் படி மாசாண வடிவு போலி சான்றிதழுடன் வந்த போது கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×